தட்டுகளைத் தட்டுவது, அகல் விளக்கு ஏற்றுவது- மோடியின் வெற்று யோசனைகளை மக்கள் மறக்கவில்லை: ப.சிதம்பரம்
டெல்லி: கொரோனா தொற்றின் 2-ம் அலை தொடங்கியதை மறுத்து மக்களை ஏமாற்றி வருகிறது மத்திய பாரதிய ஜனதா கட்சி அர்ரசு என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் சாடியுள்ளார்.
உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியதாக உருவெடுத்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்
உலக அளவில் ஒருநாள் கொரோனா மரணங்களில் இந்தியா 2-வது இடத்தில் இருந்து வருகிறது. இதனையடுத்து பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
|
ப. சிதம்பரம் கண்டனம்
அதேநேரத்தில் கொரோனா தொற்றின் இந்த 2-வது அலை தொடர்பாக மத்திய பாஜக அரசு அலட்சியம் காட்டுவதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா தொற்று இந்தியாவுக்குள் நுழையும் என்று தெரிந்த பிறகும் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கத் தவறியது.
அந்த 21 நாட்கள்.. மறக்க முடியுமா?
கொரோனா தொற்று பரவலை 21 நாட்களில் நிறுத்தி வெற்றி காண்பேன் என்று பிரதமர் மோடி பேசியதை நாடு மறக்கவில்லை. தட்டுகளைத் தட்டுங்கள், அகல் விளக்கை ஏற்றுங்கள் என்ற வெற்று யோசனைகளச் சொல்லியதையும் மக்கள் மறக்கவில்லை
ஏமாற்றும் மத்திய பாஜக அரசு
தொற்றின் பரவல் குறைந்த நேரத்தில் தடுப்பு ஊசி இயக்கத்தை விரைவுபடுத்தாமல் பொன்னான காலத்தை மத்திய அரசு விரயமாக்கியது. தொற்றின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதை மறுத்து மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. தடுப்பூசி இயக்கம் நொண்டி நடக்கும் காட்சி நமக்கு கவலையளிக்கிறது. இவ்வாறு ப. சிதம்பரம் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.