மோடி குஜராத்தில் இருக்கிறார்.. பில்கிஸ் பானு குஜராத்தின் மகள்.. “நோ கமெண்ட்ஸ்” - ப.சி கிண்டல்!
டெல்லி : "பிரதமர் மோடி நேற்று முதல் குஜராத்தில் இருக்கிறார், குஜராத்தைச் சேர்ந்தவர் பில்கிஸ் பானு. வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை" என கிண்டலாக ட்வீட் செய்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி.
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் 11 பேர் விடுவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் இருந்தவர்கள் குஜராத் அரசால், சுதந்திர தினத்தன்று விடுவிக்கப்பட்டனர்.
இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பிரதமர் மோடி குஜராத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ளார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி.

குஜராத் கலவரம்
கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட, 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

விடுவித்த குஜராத் அரசு
சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது. குஜராத் அரசு பொதுமன்னிப்பு மற்றும் குற்ற தன்மையை கருத்தில் கொண்டு இவர்களை விடுவிக்க ஆணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து தண்டனை பெற்ற 11 பேரும் கோத்ரா துணைச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

வரவேபு
இவர்களுக்கு மாலை போட்டும், ஆரத்தி எடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக கண்டித்து இருந்தன. நாட்டு மக்கள் மத்தியிலும்ம் இந்த நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பாஜக அரசு, குற்றவாளிகளுக்கு துணைபோவதாக விமர்சனங்கள் எழுந்தன.

சுப்ரீம் கோர்ட்டில்
பில்கிஸ் பானு வழக்கில் சிறையில் இருந்த 11 பேரையும் விடுதலை செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணையின்போது, குற்றவாளிகள் எந்த அடிப்படையில், நன்னடத்தையின் கீழ் விடுவிக்கப்பட்டனர். இந்த பொதுநல மனுக்கள் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

ப.சிதம்பரம்
இந்த வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் "குஜராத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேர் தண்டனையை குறைப்பதற்கான ஆய்வுக் குழுவில் பா.ஜ.க எம்எல்ஏ.க்கள் ராலிஜி, சுமன் சவுகான் இடம் பெற்றுள்ளனர். மற்றொரு உறுப்பினர், கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு விசாரணையில் முக்கிய சாட்சியாக இருந்த முரளி முல்சந்தானி" எனத் தெரிவித்திருந்தார்.

சொல்வதற்கு ஒன்றும் இல்லை
இந்நிலையில், மீண்டும் ஒரு ட்வீட்டை கிண்டலாக பதிவிட்டுள்ளார் ப.சிதம்பரம். "நாட்டின் பிரதமர் மோடி நேற்று முதல் குஜராத்தில் இருக்கிறார். இந்தியக் குடிமகளான பில்கிஸ் பானு, குஜராத்தில் பிறந்து வளர்ந்த குஜராத்தின் மகள். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications