இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பிறந்த குழந்தை... “பார்டர்” என பெயர் வைத்த பெற்றோர்
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில் பிறந்த ஆண் குழந்தைக்கு பார்டர் என பாகிஸ்தானிய பெற்றோர் பெயர் வைத்துள்ள சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ரஞ்சன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலம்ராம். இவர் மனைவி நிம்பு பாய். பலம்ராம் - நிம்புபாய் உட்பட 98 பேர் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்குச் சென்று வழிபடுவதற்காகவும் தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காகவும் பல மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் பகல்பத்து உற்சவம் 3 ஆம் திருநாள்: அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாளுக்கு அரையர் சேவை
இந்தியாவில் நாடோடிகள் போல் பல்வேறு ஊர்களுக்கும் புனித தலங்களுக்கு சென்றுவிட்டு பாகிஸ்தானில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இரண்டு மாதங்களுக்கு முன்னர் முடிவு செய்து திரும்பினர். ஆனால், இந்திய- பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில், இவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் நாட்டிற்குள் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
எல்லையில் தங்கிய மக்கள்
சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் , மீண்டும் இந்தியாவுக்குள் மீண்டும் நுழைய முடியாமல் வேறு வழியில்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்துள்ளனர். இதையடுத்து கையில் இருந்த பணத்தை வைத்து கொஞ்சம் பொருட்களை வாங்கி கூடாரம் அமைத்துள்ளனர். அவர்களை போலவே உடன் வந்த சக மக்களும் அங்குள்ள கூடாரத்தில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான மூன்று வேளை உணவு, உடை உள்ளிட்ட பொருட்கள் அந்தப் பகுதியில் உள்ள கிராமத்தினர் மனிதாபிமான அடிப்படையில் கொடுத்து உதவி வருகின்றனர்.
பார்டர் என குழந்தைக்கு பெயர்
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பலம்ராமின் மனைவி நிம்புபாயிக்கு கடந்த 2 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அட்டாரி எல்லைப் பகுதியை சேர்ந்த கிராமத்தினர் அவருக்கு மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நிம்புபாயிக்கு அழகான ஆண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தை பார்டரில் பிறந்ததால் 'பார்டர்' என்றே குழந்தைக்குப் பெயர் சூட்டியுள்ளனர். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
அகதிகளான மக்கள்
அட்டாரி எல்லையில் பலம் ராம் தவிர, பாகிஸ்தானின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பலர் அதே கூடாரத்தில் தங்கியுள்ளனர். இதில் லக்யா ராம் என்பவருக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'பாரத்' என்று பெயர் வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டுக்குள் அனுமதிக்க கோரிக்கை
பிறந்த குழந்தைக்கு பாசத்துடன் பார்டர் என பெற்றோர் பெயர் வைத்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இணையவாசிகள் குழந்தைக்கும் பெற்றோருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சொந்த நாட்டு மக்களையே அனுமதிக்க மறுக்கும் பாகிஸ்தானுக்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். பலம்ராம் உள்ளிட்ட மக்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.