எதிர்க்கட்சிகள் அமளி இல்லாமல் மத்திய பட்ஜெட் தாக்கலாகுமா? ஜூலை 21-ல் அனைத்து கட்சிக் கூட்டம்!
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22-ந் தேதி தொடங்கும் நிலையில் ஜூலை 21-ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 2-வது நாளான ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் ஜூன் 24-ந் தேதி தொடங்கி ஜூலை 2-ந் தேதி வரை நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு சபை கூட்டுக் கூட்டத்தில் ஜூன் 27-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதனையடுத்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். இதனையடுத்து இரு சபைகளும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் லோக்சபா, ராஜ்யசபாவில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் தாக்கல் செய்வார். இதையடுத்து ஜூலை 23-ந் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.
தற்போதைய மத்திய பட்ஜெட் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் பங்கேற்றிருந்தனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கும் 7-வது மத்திய பட்ஜெட் இது. மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், 6 முறை மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரானது ஆகஸ்ட் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஜூலை 21-ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடரில் நீட் முறைகேடுகள், மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எழுப்பி இருந்தன. இந்த முறை மழைக்கால கூட்டத் தொடரிலும் நீட், மணிப்பூர் விவகாரம், யுபிஎஸ்சி மோசடிகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய அரசு ஜூலை 21-ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதேபோல காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும் என்ன முடிவு எடுக்கும் என்பது எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications