26 மசோதாக்களுடன் நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்.. புயலை கிளப்பு எதிர்க்கட்சிகள் திட்டம்
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் குறைந்தபட்ச ஆதார விலை, பெகாசஸ், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சீனாவின் அத்துமீறல் உள்ளிட்ட விவகாரங்களை முன் வைத்து புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதாக்கள் உள்பட 26 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 3 அவசர சட்டங்களுக்கு மாற்றாக மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளன. இந்த கூட்டத் தொடர் 20 நாட்களுக்கு டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அவற்றில் முக்கியமானவை கிரிப்டோ கரன்சி மற்றும் டிஜிட்டர் கரன்சியை ஒழுங்குமுறைப்படுத்துவது, ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சிகளை கொண்டு வர அனுமதிப்பது, தகவல் பாதுகாப்பு, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ இயக்குநர்களின் பதவி காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டிப்பது உள்ளிட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குளிர் கால கூட்டத் தொடரின் முதல் நாள் அன்றே 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத் தொடர்களில் பாஜக, காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இந்த கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் கூறுகையில் குளிர் கால கூட்டத் தொடரில் எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்கவும் ஆலோசனை நடத்தவும் மத்திய அரசு தயாராகவே உள்ளது. ஆனால் அவை நேர்மறையான, ஆக்கப்பூர்வமான விவாதங்களாக இருக்க வேண்டும் என்றார்.
நாளை முதல் நாள் கூட்டத் தொடரில் குறைந்தபட்ச ஆதாரவிலை, விவசாயிகளுக்கான மின் திருத்த மசோதா, கொரோனாவால் இறந்தோருக்கான இழப்பீடு தொகை உள்ளிட்டவை குறித்து விவாதங்கள் இருக்கும். 26 மசோதாக்களையாவது இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்து விட வேண்டும் என மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் எதிர்க்கட்சிகளோ பெகாசஸ், சீனாவின் அத்துமீறல், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளாதது உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளை கையிலெடுக்க முடிவு செய்துள்ளன. டெல்லியில் போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுப்பது குறித்தும் எதிர்க்கட்சிகள் விவாதத்தை கிளப்பவுள்ளன.
நாடாளுமன்றத்தில் மட்டும் அல்ல வெளியேவும் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன. 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி விவசாயிகள் கடந்த ஆண்டு தொடங்கிய போராட்டம் நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. குளிர் கால கூட்டத் தொடரும் நாளை தொடங்குவதால் ஓராண்டு நினைவையொட்டி விவசாயத் தலைவர்களும் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளனர்.
26 மசோதாக்கள் என்னென்ன?
கிரிப்டோ கரன்சி மற்றும் டிஜிட்டர் கரன்சியை ஒழுங்குமுறைப்படுத்துவது, ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சிகளை கொண்டு வர அனுமதிப்பது, தகவல் பாதுகாப்பு, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ இயக்குநர்களின் பதவி காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டிப்பது, உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் திருத்தச் சட்டம், உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான ஊதிய திருத்த மசோதா 2021, திவால் சட்டத் திருத்த 2ஆவது மசோதா, ஓய்வூதிய ஒழுங்குமுறை மேம்பாட்டு மசோதா, குடியேற்றச் சட்டம் 1983 மாற்றப்பட்டு புதிய குடியேற்ற மசோதா, மனிதக் கடத்தலை தடுத்தல், பாதுகாத்தல், மறுவாழ்வு மசோதா உள்ளிட்டவை ஆகும்.
போதை மருந்து தடுப்பு, மத்திய ஊழல் தடுப்பு திருத்தச் சட்டம், டெல்லி சிறப்பு போலீஸ் உருவாக்கம் ஆகிய அவசர சட்டங்களுக்கு பதில் சட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.