தேச பாதுகாப்பு பெயரில் எல்லா நேரமும் அரசுக்கு "ஃப்ரீ பாஸ்" கொடுக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நிபுணர் குழு விசாரணை நடத்தும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியதோடு, தேச பாதுகாப்பு என்ற காரணத்தை காட்டி, யாரையும் உளவு பார்க்க ஃப்ரீ பாஸ் பெற முடியாது என்றும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி, அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் பலரின் செல்போன் உரையாடல்கள் இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தி கார்டியன் உள்ளிட்ட 16 சர்வதேச ஊடகங்கள் இணைந்து நடத்திய ஆய்வுக்கு பிறகு வெளியிட்டுள்ள கட்டுரையின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக உலகம் முழுக்க அரசியலில் புயல் வீசத் தொடங்கியுள்ளது.

அரசியல் தலைவர்கள்
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், பல்வேறு பத்திரிகையாளர்கள், ஒரு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தொடங்கி பல முன்னணி பிரபலங்களின், அரசியல் தலைவர்களின் போன்கள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டு கேட்கப்பட்டதாக அந்த ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

குற்றச்சாட்டு
எந்த ஒரு நாட்டின் அரசுக்கும் அல்லாது.. வேறு தனி நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு இந்த சாப்ட்வேர் விற்பனை செய்யப்படுவது கிடையாது. எனவே இந்தியாவில் உள்ளவர்கள் உளவு பாதிக்கப்பட்டிருந்தால் அது அரசுக்கு தெரியாமல் இருக்காது என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது. ஆனால் மத்திய அரசோ, தாங்கள் அதுபோல ஒட்டு கேட்கவில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தது.

பத்திரிக்கையாளர்கள் வழக்கு
பெகாசஸ் உளவு விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பத்தரிகையாளர் ஹிந்து என்.ராம் உட்பட சிலரால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை கடந்த 13ம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான நீதிபதிகள் ஹிமா கோலி, சூர்யா காந்த் ஆகியோர் அமர்வு இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

தலைமை நீதிபதி
பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நிபுணர் குழு விசாரணை நடத்த வேண்டும் என்பது தீர்ப்பாகும். மனுதாரர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதையும், மத்திய அரசின் வாதம் ஏற்கப்படவில்லை என்பதையும் இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது.
தீர்ப்பின்போது தலைமை நீதிபதி ரமணா சில அறிவுரைகளை மத்திய அரசுக்கு முன் வைத்தார். அவரது கருத்துக்கள் இவைதான்: மனுதாரர்களில் சிலர் பெகாசஸால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். அத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். இந்தியாவில் தனியுரிமைக்கான உரிமையைப் பாதுகாப்பதன் அவசியம் உள்ளது.

தனியுரிமை முக்கியம்
நாம் தகவல் சகாப்தத்தில் வாழ்கிறோம். தொழில்நுட்பம் முக்கியமானது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஆனால், தனியுரிமைக்கான உரிமையைப் பாதுகாப்பது முக்கியம். பத்திரிகையாளர்கள் போன்றோர்கள் மட்டுமல்ல, அனைத்து குடிமக்களுக்கும் தனியுரிமை முக்கியம். தனியுரிமைக்கான உரிமையில் கட்டுப்பாடுகள் உள்ளன ஆனால் அந்த கட்டுப்பாடுகள் அரசியலமைப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இன்றைய உலகில் தனியுரிமையில் சமரசம் செய்வது பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு மட்டும்தான். தேசிய பாதுகாப்புக்காக மட்டுமே தேவைப்படும்போது தனியுரிமையில் சமரசம் செய்ய முடியும்.

மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை
ஆரம்பத்தில் இந்த நீதிமன்றம் செய்தித்தாள் செய்திகளின் அடிப்படையில் தாக்கல் செய்த ரிட் மனுக்களில் திருப்தி அடையவில்லை. இருப்பினும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களால் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே இதை தீவிரமாக விசாரிக்க தேவை ஏற்பட்டது. இந்த நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு முதல் பெகாசஸ் உளவு தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட மத்திய அரசுக்கு போதுமான அவகாசம் வழங்கியது. இருப்பினும் மத்திய அரசால் பிரமாணப் பத்திரம் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு இந்த விஷயத்தை தெளிவுபடுத்தியிருந்தால் நம் மீதான சுமை குறைந்திருக்கும்.

தேசிய பாதுகாப்பு
தேசிய பாதுகாப்பு காரணத்தை கூறி, ஒவ்வொரு முறையும் அரசு உளவு பார்க்க ஃப்ரீ பாஸ் பெற முடியாது. நீதிமன்றம் வாய்மூடி பார்வையாளனாக ஆக்கிவிடக் கூடாது. உளவு பார்க்கப்படவில்லை என்று மத்திய அரசு குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, எனவே உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் ஒரு நிபுணர் குழுவை நாங்கள் நியமிக்கிறோம். அவர்கள் உளவு நடைபெற்றதா என்பதை பற்றி ஆய்வு செய்வார்கள். இவ்வாறு தலைமை நீதிபதி ரமணா தனது தீர்ப்பில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications