பெகாசஸ் விவகாரம் - ராகுல் தலைமையில் எதிர்கட்சியினர் ஆலோசனை... போட்டி நாடாளுமன்றம் நடக்குமா
பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி எதிர்கட்சித்தலைவர்கள், பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் பூதகரமாகி வருகிறது. ராகுல்காந்தி தலைமையில் இன்றும் எதிர்கட்சியினர் கூடி ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
டெல்லி: பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக அரசு நெருக்கடி தருவது பற்றி ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று மீண்டும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெகாசஸ் பிரச்சினையில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய கொள்கையை வகுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
'பெகாசஸ்' உளவு மென்பொருள் மூலம் முக்கிய நபர்களின் செல்போன் போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. அதன்படி, இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Exclusive: அரசியல் நாகரீகம் தெரியாதவர் எடப்பாடி... கலைஞர் படம் பற்றி நெகிழும் அமைச்சர் சிவசங்கர்..!
பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கடந்த வாரம் எதிர்கட்சியினர் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது நாடாளுமன்றத்தை நாங்கள் முடக்கி வருவதாக மத்திய பாஜக அரசு கூறி வருகிறது. நாங்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கவில்லை. நாங்கள் எங்களுடைய கடமையைத்தான் செய்கிறோம்.
ராகுல்காந்தி புகார்
பெகாசஸ் என்கிற ஆயுதம் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தேசவிரோத சக்திகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் எதிராக மட்டுமே பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த தேசத்தின் இளைஞர்களே! உங்கள் செல்போன்களுக்கு பெகாசஸ் என்ற ஒட்டுகேட்பு ஆயுதத்தை மோடி அரசு அனுப்பி வைத்துள்ளது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுகேட்கப்பட்டது தேசவிரோத செயல். இந்த மென்பொருளை யார் வாங்கியது? மத்திய அரசே வாங்கி ஒட்டு கேட்டதா? இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு ஆயுதத்தை எனக்கு எதிராக பயன்படுத்தி இருக்கின்றனர். உச்சநீதிமன்றத்துக்கு எதிராக, நாட்டின் தலைவர்களுக்கு எதிராக, பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஜனநாயகத்தில் எதிராக ஏவுவதா
இந்தியாவின் அத்தனை ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக பெகாசஸ் ஆயுதம் ஏவப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூடாது? அப்படி என்ன உங்களுக்கு அச்சம்? என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.
பெகாசஸ் ஒட்டுகேட்பு நடவடிக்கையை ஏன் நீங்கள் மேற்கொண்டீர்கள்? இதற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதிலளிக்க வேண்டும். நீங்கள் இருவரும் மவுனத்தை கலைத்துவிட்டு திட்டவட்டமான பதிலைச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் காலையில் எதிர்கட்சியினர் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
எதிர்கட்சிகள் இன்று மீண்டும் ஆலோசனை
டெல்லி அரசியல்சாசன கிளப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர். பெகாசஸ் பிரச்சினையில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய கொள்கையை வகுப்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. போட்டிநாடாளுமன்றக் கூட்டம் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க திரிணாமுல் காங்கிரசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ராகுல் காந்தி நடத்திவரும் ஆலோசனை கூட்டங்களை இந்த கட்சியினர் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
நிதிஷ்குமார் ஆதரவு
இதனிடையே பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பெகாசஸ் மென்பொருள் ஒட்டுக்கேட்பு குறித்த விசாரணைக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி உள்ளார். எங்கள் கூட்டணி நீண்டகாலமாக சுமூகமாக உள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் கட்சியின் மூத்த தலைவர்களுடன் விவாதிக்கலாம் என்றார்.
எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியிருப்பது பற்றி நிதிஷ்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நாடாளுமன்றத்தின் மேல்மட்டத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி நான் கருத்து கூற முடியாது என்று தெரிவித்தார். அதே நேரத்தில், யாரிடமாவது இதுபற்றி உறுதியான தகவல்கள் ஏதும் இருப்பின் அதை அரசாங்கத்திடம் அவர்கள் தெரிவிக்க வேண்டும். இந்த பிரச்சினைக்கு விரைவில் உறுதியான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க.வுடன் கூட்டணியில் உள்ளபோதிலும் அவர் பெகாசஸ் விசாரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.