ஓய்வூதியதாரர்கள் கவனத்துக்கு.. ஆன்லைனிலேயே வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் - எளிமையான வழிமுறை
டெல்லி: ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழை (Life Certificate) ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்க எளிமையான வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் நேரில் சென்றுதான் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இனி ஓய்வூதியதாரர்களுக்கு இல்லை.
வயதான காலத்தில் முதியவர்களுக்கு தேவையில்லாத அலைச்சலை தவிர்ப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
ஒரே கிளாஸ்.. 15 வயது பிஞ்சுகள்.. வீட்டை விட்டு ஓடிப்போன 4
மோசடிகளை தடுக்கும் வாழ்நாள் சான்றிதழ்..
இந்தியாவில் கிட்டத்தட்ட 1 கோடிக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசுகள் சார்பில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியத்துக்காகவே மத்திய, மாநில பட்ஜெட்டுகளில் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அதாவது, தாங்கள் உயிருடன்தான் இருக்கிறோம் என்பதை அரசுக்கு தெரியப்படுவத்தவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. மோசடிகளை தடுப்பதற்காகவும் இந்த நடைமுறை அமலில் உள்ளது.
ஓய்வூதியதாரர்கள் சிரமம்..
இதன்படி வங்கிகள், தபால் அலுவலகங்கள், மாநில அல்லது யூனியன் பிரதேச அரசு அலுவலகங்கள் என இவற்றில் ஏதாவது ஒரு அலுவலகத்தில் ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டோர் அக்டோபர் 1 முதல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, வயது முதிர்வு காரணமாக பல ஓய்வூதியதாரர்கள் இவ்வாறு நேரடியாக அலுவலகத்துக்கு வந்து செல்வது அவர்களுக்கு கடினமாக இருப்பதாக புகார்கள் எழுந்து வந்தன.
வந்துவிட்டது ஆன்லைன் வழிமுறை
இதனைக் கருத்தில்கொண்டு, ஆன்லைன் மூலமாக ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 'ஜீவன் பிரமான்' (Jeevan Pramaan) என்ற போர்ட்டல் அறிமுகப்பட்டுள்ளது. இதற்கு, ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆன்ட்ராய்டு போனில் 'Jeevan Pramaan' செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். அதன் பின்னர், ஓய்வூதியதாரரை புகைப்படம் எடுத்து அதனை அந்த போர்ட்டலில் அப்லோடு செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து, அதில் இருக்கும் விவரங்களை பூர்த்தி செய்தாலே வாழ்நாள் சான்றிழல் ரெடியாகிவிடும். அதை அப்படியே அனுப்பினால் போதுமானது.
வீட்டுக்கு வந்து வாங்கிச் செல்வார்கள்..
மேற்கூறிய ஆன்லைன் நடைமுறை மிக மிக எளிமையானது. ஆனால், ஆன்லைன் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது எனக் கூறுபவர்களுக்கு அதற்கு மாற்றான வழிமுறைகள் இருக்கின்றன. அதன்படி, அவர்கள் தங்கள் ஆன்ட்ராய்டு போனில் கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று 'Postinfo' என்ற செயலியை டவுன்லோடு செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பினால் மட்டும் போதுமானது. தபால்காரர்கள் வீட்டுக்கே வந்து வாழ்நாள் சான்றிதழை அவர்களே தயார் செய்து வாங்கிச் சென்றுவிடுவார்கள். இல்லையெனில், கூகுள் ப்ளேஸ்டோரில் 'Doorstep Banking' என்ற செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். அப்படி செய்தால், வங்கி ஊழியர்கள் வீட்டுக்கே வந்து வாழ்நாள் சான்றிதழை தயார் செய்து வாங்கிக் கொள்வார்கள்.