ஆப்கன் பயங்கரவாதிகளின் புகலிடமாக.. மாறுவதை நாம் தான் தடுக்க வேண்டும்.. ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி
டெல்லி: ஆப்கன் குறித்த ஜி20 மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ஆப்கன் பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறுவதைச் சர்வதேச சமூகம் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சி இல்லை என்றால் ஆப்கானிஸ்தானின் நம்மால் விரும்பிய மாற்றத்தைக் கொண்டு வருவது கடினம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் நிலை குறித்த ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாகக் கலந்து கொண்டார்.
தமிழகம் உட்பட 3 மாநிலங்களில்.. என்ஐஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
இதில் பேசிய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைச் சர்வதேச சமூகம் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்,
பிரதமர் மோடி
ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டு பேசியது தொடர்பாகப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆப்கானிஸ்தான் மீதான ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்றான். பயங்கரவாதிகள் மற்றும் அடிப்படை வாதிகளின் புகலிடமாக ஆப்கன் மாறுவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். ஆப்கானிஸ்தானில் தற்போது மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ள குடிமக்களுக்கு உடனடியாக உதவிகள் சென்று சேர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தேன்" என்று அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராகக் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா இருந்தது. அப்போது ஆப்கன் விவகாரம் குறித்துக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அனைவராலும் ஏற்கப்பட்டது. அதில் ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகளை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆப்கானிஸ்தானைப் பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் விளக்கப்பட்டிருந்தது. மேலும், தற்போது நிலவும் நெருக்கடி நிலைக்குப் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு பெற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
பிரதமர் பேச்சு
பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தான் மக்களின் வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்வதாகவும் உடனடியாக ஆப்கன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைப்பதைச் சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகளின் புகலிடமாக மாறுவதைச் சர்வதேச சமூகம் தடுக்க வேண்டிய அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
சர்வதேச சமூகம்
ஆப்கனில் நிலவும் பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான கூட்டுப் போராட்டத்தைச் சர்வதேச சமூகம் எடுக்க வேண்டும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கனில் ஏற்படுத்தப்பட்ட சமூக-பொருளாதார முன்னேற்றங்களைப் பாதுகாப்பதற்காகவும் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரை உரிமைகளைப் பாதுகாக்கவும் ஆப்கனில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
ஐநா உதவ வேண்டும்
ஆப்கனில் நிலவும் நிலைமையை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும் என்றும் பிரதமர் கோரிக்கை விடுத்தார். ஆப்கானிஸ்தான் மீதான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2593க்கு அனைத்து ஜி20 நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டும். சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சி இல்லை என்றால் ஆப்கானிஸ்தானின் நம்மால் விரும்பிய மாற்றத்தைக் கொண்டு வருவது கடினம் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.