"30 ஆண்டுகள் முடிந்தது, இப்போது முக்கிய இடத்தில் உள்ளோம்.." இந்தியா- இஸ்ரேல் உறவு பற்றி பிரதமர் மோடி
டெல்லி: பெகாசஸ் விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இந்தியா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான உறவுகள் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது தொடர்பாகப் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இஸ்ரேல் நாட்டை இந்தியா 1950 செப் 17ஆம் தேதியே முழுமை அங்கீகரித்த போதிலும், 1992ஆம் ஆண்டு வரை இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் தொடங்கப்படவில்லை. 1992 ஜன. 29இல் தான் தூதரக உறவுகள் தொடங்கப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு நேற்று (ஜன. 29) உடன் 30 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இது குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார்,

சிறப்பான உறவு
இந்தியா இஸ்ரேல் உறவு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், "இந்தியா-இஸ்ரேல் உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கும் இதைவிடச் சிறந்த நேரம் இருக்க முடியாது. இந்த காலம் இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானது. இரு நாடுகளின் வளர்ச்சியில் இரு நாடுகளுக்கும் பங்கு உள்ளது. இந்தியா மற்றும் இஸ்ரேல் மக்கள் எப்போதும் சிறப்பான உறவைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

30 ஆண்டுகள்
30 ஆண்டுகளுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட இந்த நாள் (ஜன. 29) இரு நாட்டு உறவில் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் பழமையான வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயம். பல நூற்றாண்டுகளாக, யூத சமூகம் எந்தவித பாகுபாடும் இல்லாமல் இணக்கமான சூழலில் இந்தியாவில் இருந்துள்ளது. நமது வளர்ச்சிப் பயணத்திலும் அவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்

அடுத்தகட்ட இலக்குகள்
உலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் இந்த நேரத்தில், இந்தியா-இஸ்ரேல் உறவுகளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதேபோல இஸ்ரேல் சுதந்திரம் அடைந்து அடுத்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. எனவே பரஸ்பர ஒத்துழைப்புக்கான புதிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கு இதைவிடச் சிறந்த நேரம் இருக்க முடியாது.

இந்தியா கேட்
இந்த 30 ஆண்டுக்கால முக்கியமான மைல்கல்லில், அனைவரையும் வாழ்த்துகிறேன். வரும் ஆண்டுகளில் இந்தியா-இஸ்ரேல் நட்புறவு பரஸ்பர ஒத்துழைப்பின் புதிய சாதனைகளைத் தொடரும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறினார். இந்தியா-இஸ்ரேல் இடையேயான 30 ஆண்டுக்கால உறவைக் குறிக்கும் விதமாக, மும்பையில் ‘இந்தியா கேட்' பகுதியில், இரு நாடுகளின் தேசியக் கொடிகள் வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்டன.
Recommended Video

மீண்டும் பெகாசஸ்
பெகாசஸ் விவகாரம் குறித்து சமீபத்தில் தி நியூயார்க் டைம்ஸ் இதழ் கட்டுரை வெளியிட்டுள்ள கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த பேச்சு முக்கியமான பார்க்கப்படுகிறது. தி நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் கடந்த 2017இல் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் சென்ற போது அதிநவீன ஆயுதங்கள் மற்றும் நுண்ணறிவு தொடர்பாகப் போடப்பட்ட ஒப்பந்தத்தில் பெகாசஸ் மையப்புள்ளியாக இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications