சூடு பிடிக்கும் தேர்தல் களம்... 15 நாட்களில் 2ஆவது முறையாக... மே. வங்கம் செல்லும் பிரதமர் மோடி
டெல்லி: மேற்கு வங்கத்தில் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி 15 நாட்களில் இரண்டாவது முறையாக மேற்கு வங்க மாநிலத்திற்குச் செல்கிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பிரச்சார பணிகளை ஏற்கனவே, மாநிலத்திலுள்ள அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன.
கடந்த இரு தேர்களிலும் வெற்றிபெற்று, ஆட்சியைத் தக்க வைத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதில் பாஜக முனைப்புக் காட்டி வருகிறது. இதற்காகப் பல முக்கிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களையும் பாஜக தன் பக்கம் இழுத்து வருகிறது.
மோடி பயணம்
மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஹால்டியா மாவட்டத்தில் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்கம் செல்கிறார். பிரதமர் மோடி 15 நாட்களில் இரண்டாவது முறையாக மேற்கு வங்கம் செல்வது குறிப்பிடத்தக்கது.
நேதாஜி பிறந்தநாள்
சுபாஷ் சந்திர போஸின் 125ஆவது பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாட மேற்கு வங்க மாநிலத்தில் மாபெரும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளக் கடந்த ஜனவரி 23ஆம் தேதி பிரதமர் மோடி மேற்கு வங்கத்திற்குச் சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடியும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இணைந்து நேதாஜி பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டனர்.
பேச்சை நிறுத்திய மம்தா
இந்நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி போச தொடங்கியதும், அங்கிருந்தவர் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிடத் தொடங்கினர். இதனால் கோபமடைந்த மம்தா, தனது பேச்சைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டார். இது ஒன்றும் அரசியல் கட்சி நிகழ்வு அல்ல என்று கூறிய மம்தா, அரசு விழாவில் கொஞ்சமாவது கண்ணியத்துடன் நடந்துகொள்ளுங்கள் என்று கூறி தனது பேச்சை முடித்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தாங்கரும் கலந்துகொண்டிருந்தார்.
கலந்து கொள்ள மாட்டார்
தனது அரசியல் லாபத்திற்காகச் சுதந்திரப் போராட்ட தியாகி நேதாஜிக்கு உரிய மரியாதை கூட பாஜக செலுத்தவில்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. மேலும், இன்று நடைபெறும் விழாவும் இதே போல தான் நடைபெறும் என்பதால் மம்தா பானர்ஜி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.