ரியல் கேம் சேஞ்சர்.. உலகின் முதல் mRNA வேக்சின்.. மாபெரும் சாதனையை நோக்கி இந்தியா:பிரதமர் பெருமிதம்
டெல்லி: ஐநா சபையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் தற்போது சோதனையில் உள்ள உலகின் முதல் mRNA தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
உலகில் எந்தவொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. சில நாடுகள் மட்டுமே தீவிர கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்துள்ளது.
இருப்பினும், கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருவதால், வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நாகை: வீடு புகுந்து நகையை திருடிய மர்ம கும்பல்.. கடைசியில் நடந்ததுதான் செம ட்விஸ்ட்!
கொரோனா பரவல்
சீனாவில் முதலில் தோன்றிய கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது. அந்த அலை கட்டுக்குள் வருவதற்குள், பிரிட்டன் நாட்டில் தோன்றிய ஆல்பா கொரோனா அடுத்த அலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்தியாவில் தோன்றிய டெல்டா கொரோனா இப்போது உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இப்படித் தொடர்ந்து கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், வல்லரசு நாடுகளுக்கும் இது மிகப் பெரிய சவாலாக உள்ளது.
இந்தியாவில் வேக்சின் பணிகள்
நாட்டில் தற்போதைய சூழலில் கொரோனா வேக்சின் மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதிலும் வல்லரசு நாடுகள் 2 டோஸ் வேக்சின்களை முடித்து, பூஸ்டர் டோஸ் குறித்து ஆலோசித்து வருகிறது. அதேபோல இந்தியாவிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா வேக்சின் செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தி வருகிறது.
கொரோனா வேக்சின்கள்
இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, ஜான்சன், மாடர்னா, சைடஸ் கேடிலா ஆகிய கொரோனா வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 6 கொரோனா வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளே இந்தியாவில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம் வேறு சில கொரோனா வேக்சின்களின் சோதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி பேச்சு
இந்நிலையில், 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி ஐநா பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முதல் mRNA கொரோனா வேக்சின் தற்போது இறுதிக்கட்ட சோதனை நிலையில் உள்ளதாகவும் விரைவில் அது பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்தார். ஐநா சபையில் பேசிய பிரதமர் மோடி, "உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா இப்போது உருவாக்கியுள்ளது. அந்த mRNA தடுப்பூசி இப்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. அதேபோல நேரடியாக நாசியில் செலுத்தக் கூடிய தடுப்பூசி குறித்த ஆய்வுகளையும் இந்திய ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்" என்றார்.
நாட்டின் முதல் mRNA தடுப்பூசி
ஏற்கனவே நாட்டில் பல்வேறு வேக்சிகன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி ஐநா சபையிலேயே குறிப்பிட்டுள்ள இந்த வேக்சின் குறித்த இயல்பாகவே சந்தேகம் எழுகிறது. புனேவைச் சேர்ந்த Emcure Pharmaceuticals என்ற நிறுவனம் தான் உலகின் முதல் mRNA தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. Emcure Pharmaceuticals நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்கட்ட சோதனை முடிவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்திருந்தது. முதற்கட்ட ஆய்வு முடிவில் இந்த mRNA தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மற்றும் அதிக நோயெதிர்ப்பு சக்தியைத் தருவது உறுதியானது.
3ஆம் கட்ட சோதனை
இதன் பின்னர் கடந்த ஆகஸ்ட்டில், mRNA வேக்சினின் 2 மற்றும் 3ஆம் கட்ட சோதனைக்கு டிசிஜிஐ ஒப்புதல் அளித்திருந்தது. இப்போது நாடு முழுவதும் சுமார் 27 நகரங்களில் 3ஆம் கட்ட தடுப்பூசி சோதனை நடைபெறுகிறது. ஐசிஎம்ஆர் அமைப்புடன் இணைந்து இந்த 3ஆம் கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும், சில மாதங்களில் கொரோனா 3ஆம் கட்ட சோதனை முடிந்து அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.