ஜம்மு காஷ்மீரின் ரஜவுரியில்... ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுகிறார் பிரதமர் மோடி..!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜவுரியில் ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளி கொண்டாடுகிறார் பிரதமர் மோடி.
கடந்த 2014 முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவது பிரதமர் மோடியின் வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் ராணுவ வீரர்களுடன் இணைந்து பண்டிகையை கொண்டாடுகிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி ரஜவுரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்தாண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் படைவீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி அங்கு தீபம் ஏற்றினார்.
ஜம்மு காஷ்மீரின் பூன்ச் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை நடந்து வரும் சூழலில், பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்வது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இந்தாண்டு தீபாவாளி கொண்டாடுவரா என்ற கேள்வி எழுந்தது.
'வீடு வீடாக சென்று தடுப்பூசி.. இதுதான் நமது அடுத்த இலக்கு'.. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
இந்நிலையில் அவர் இன்று ஜம்முவுக்கு புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மோடியின் வருகை ராணுவத்தினருக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் எந்த அச்சுறுத்தல்களுக்கும் இந்தியா அஞ்சாது என்பதை உலகிற்கு பறைசாற்றும் நிகழ்வாக அமையும் என ராணுவ முத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே நாட்டு மக்களுக்கு தீபாவாளி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் தர வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.