எளிமை + தனித்தன்மை + உணர்வு = “இந்தி”! இந்தியாவுக்கே இந்தியால் “தனி மரியாதை” - புகழ்ந்து தள்ளிய மோடி
டெல்லி: இந்தி மொழியால் இந்தியாவுக்கு உலகளவில் தனி மரியாதை கிடைப்பதாகவும், இந்தி அனைவரையும் கவரும் மொழி எனவும் பிரதமர் நரேந்திர மோடி இந்தி தின வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார்.
வட இந்தியாவின் சில மாநிலங்களில் பேசப்படும் மொழியான இந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி தினத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரா மோடி உள்ளிட்ட தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களையும், இந்தியின் பெருமைகளையும் பேசி வருகின்றனர்.

பிரதமர் மோடி
இதுகுறித்து ட்விட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "இந்தி மொழியால் இந்தியாவுக்கு உலகளவில் தனி மரியாதை கிடைத்துள்ளது. எளிமை, தனித்தன்மை, உணர்வு ஆகியவற்றால் இந்தி எப்போதும் கவர்கிறது. இந்தி தினத்தன்று அதை செழுமைபடுத்தவும், வலுப்படுத்தவும் பங்காற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தி திணிப்பு
நாடு முழுவதும் பல மாநிலங்களில் பல மொழிகளில் பேசப்பட்டு வரும் நிலையில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அனைத்து மாநிலங்களிலும் இந்தி திணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள், அறிவிப்புகள், தினங்கள், அமைச்சரவை பெயர்களும் இந்தியில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

புதிய கல்விக்கொள்கை
புதிய கல்விக்கொள்கையின் மூலமாகவும் இந்தியை திணிக்க முயற்சியில் மத்தியில் அரசு இறங்கி இருப்பதாக எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெற்ற 37 வது நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு கூட்டத்தில் இந்தி தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சைக்கு உள்ளானது.

அமித்ஷா பேச்சு
"அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்து உள்ளார். 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவை கட்டாயம் வழங்க வேண்டும். அலுவல் மொழியான இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கியமான அங்கமாக மாற்றுவதற்கான நேரம் இது. இந்தி மொழியை நாம் கொண்டு வருவது உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல.

கடும் எதிர்ப்பு
ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும். பல்வேறு மொழிகளை பேசும் மாநில மக்கள் தங்களுக்கு இடையே உரையாடும்போது இந்தியில் பேச வேண்டும்." என்றார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இன்று கர்நாடகாவில் இந்தி தினம் கொண்டாட அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications