ஏழைகள் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.. பிரதமர் மோடி புகழாரம்!!!
டெல்லி: எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எம்ஜிஆரின் ரசிகர்கள், அதிமுக கட்சி தொண்டர்கள் என பலர் எம்ஜிஆரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருக்கும் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
ஆங்காங்கே எம்ஜிஆரின் திருவுருவப்படங்களை வைத்து மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி அவரது திரைப்படத்தில் இடம்பெற்ற கருத்துள்ள பாடல்களை ஒலிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் எம்ஜிஆரின் பிறந்தநாளன்று பிரதமர் மோடியும் அவரது நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன என பாராட்டியுள்ளார்.
எம்ஜிஆர் ஜனவரி 17ஆம் தேதி 1917 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அரசியல் பணி செய்து வந்தார். இந்த நிலையில் அண்ணா மறைந்த பிறகு திமுகவில் கருணாநிதியுடன் மோதல் ஏற்பட்டு திமுகவிலிருந்து விலகி அண்ணா திமுக என்ற புதிய கட்சியை 1972 ஆம் ஆண்டு தொடங்கினார்.