அரசியல் நெருக்கடி.. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.. திருமாவளவன் ‛பளீச்’
டெல்லி: பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளால் நாட்டில் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. காங்கிரஸ் தான் நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்தார். 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் புதிய காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த மாதம் 17 ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் கடந்த மாதம் 19 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மல்லிகார்ஜூன கார்கே வெற்றி
இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய கேரள மாநிலம் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்பி சசிதரூர் தோல்வியடைந்தார். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

கார்கேவை சந்தித்த திருமாவளவன்
இதையடுத்து மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை டெல்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு திருமாவளவன் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உற்ற துணையாக
மல்லிகார்ஜூன கார்கே அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர். தற்போதைய சூழலில் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளால் நாட்டில் அரசியல் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தோம். இந்த சந்திப்பின்போது நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் உற்ற துணையாக இருப்போம் என்பதை சுட்டிக்காட்டினோம்.

ஒருங்கிணைக்கும் பொறுப்பு
இந்த அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜ கார்கேவுக்கு உள்ளது. அகில இந்திய அளவில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. மல்லிகார்ஜூன கார்கேவின் நீண்ட நெடிய அனுபம் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதற்கும், அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்கவும் பயன்படும். அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவார் என்று நம்புகிறோம்.












Click it and Unblock the Notifications