ஆம் ஆத்மி நிர்வாகிகளை பாஜகவில் இணையுங்க! தேர்தலை எதிர்கொள்ளும் 5 மாநிலங்களுக்கு மேலிடம் கட்டளை
டெல்லி: குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு காங்கிரசுக்கு மாற்றாக ஆத்ஆத்மி கட்சியை வளர விடக்கூடாது. ஆம் ஆத்மி நிர்வாகிகளை கட்சியில் இணைக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர்களுக்கு அதன் மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் மட்டும் ஆட்சியை பிடித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் அமர்ந்தது. பகவந்த் மான் முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
“அந்தக் கட்சியை விட ஆம் ஆத்மி எவ்வளவோ பெட்டர்” - எந்தப் பக்கம் தாவ திட்டமிடுகிறார் ஹர்திக் படேல்?
ஆம் ஆத்மி கட்சி ஆர்வம்
கட்சி துவங்கிய 10 ஆண்டுக்குள் 2வது மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது அக்கட்சியினருக்கு ஊக்கம் அளித்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி தேய்ந்து வரும் நிலையில் அதற்கு மாற்றாக இந்தியா முழுவதும் கட்சியை பலப்படுத்த ஆம் ஆத்மி முயற்சித்து வருகிறது. ஏற்கனவே கர்நாடகம், கோவா மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் கால்பதித்துள்ள ஆம் ஆத்மி கட்சி விரைவில் நடைபெற உள்ள பிற மாநில தேர்தல்களில் கவனம் செலுத்த துவங்கி உள்ளது.
5 மாநில தேர்தல்
குறிப்பாக இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத், அதன்பிறகு நடக்கும் இமாச்சல பிரதேசம், கர்நாடகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக இருமாநிலங்களிலும் அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். அவர்கள் களநிலவரங்களையும், வேட்பாளர்களாக நிறுத்த வேண்டிய நிர்வாகிகளின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
வாக்குகள் பிரிய வாய்ப்பு
தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் குஜராத், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் நேரிடை போட்டி என்பது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் உள்ளது. கர்நாடகத்தில் கூடுதலாக முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி களத்தில் இருக்கும். ஆனால் தற்போது இந்த 5 மாநிலங்களில் கூடுதலாக ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது. இதனால் வாக்குகள் பிரிய வாய்ப்புள்ளது.
பாஜக மேலிடம் உத்தரவு
தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வரும் நிலையில் ஆம் ஆத்மி குறுக்கே வருவது பிரச்சனையை ஏற்படுத்தலாம். இதனால் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாட்டை பாஜக உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதனால் தான் அனைத்து மாநிலங்களுக்கும் குறிப்பாக தேர்தல் நடைபெற உள்ள மாநில நிர்வாகிகளுக்கு பாஜக மேலிடம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியினரை பாஜகவில் இணையுங்க..
அதன்படி, தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாட்டை தடுக்க வேண்டும். இதனால் எந்த முன்நிபந்தனையும் இன்றி பாஜகவில் சேர ஆர்வமுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டம் மற்றும் மாநில நிர்வாகிகளை கட்சியில் இணைக்க வேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக பாஜகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் வெவ்வேறு பிரிவுகளில் செயல்பட்டு வந்த 500க்கும் அதிகமான நிர்வாகிகள் பாஜகவில் இணைக்கப்பட்டுள்ளனர். தேர்தலை சந்தித்த உத்தரகாண்ட்டில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் உள்பட பலர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். அதோடு பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஏற்கனவே செயல்படுத்தும் திட்டங்களை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.