கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கலாம்.. ஆனால் இந்த 3 விஷயங்கள் ரொம்ப முக்கியம்.. ஐசிஎம்ஆர் கருத்து
டெல்லி: கொரோனா பாசிட்டிவ் விகிதம், தடுப்பூசி பணிகள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்ட பிறகே, மாநில அரசுகள் கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவலின் 2ஆம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போது தான் கொரோனா பரவல் மெல்லக் குறைந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.32 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை இந்தியாவில் 2.83 கோடி பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 6 மாதங்களில்..அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி.. மத்திய அரசு அறிவிப்பு vs கள நிலவரம் என்ன
இந்தியாவில் ஊரடங்கு
கொரோனா பரவல் உச்சத்திலிருந்த போது மத்திய அரசு எவ்விதமான ஊரடங்கு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், கிட்டதட்ட அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கு அல்லது ஊரடங்கிற்கு இணையான தடை உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. மே மாதம் இந்தியாவில் சுமார் 98% மக்கள் எதாவது ஒரு வகையான ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் தான் இருந்ததாக ஆய்வுகளிலும் தெரிவிக்கப்பட்டன
3 விஷயங்கள்
தற்போது கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பதற்கு முன்னர், மாநில அரசுகள் 3 விஷயங்களை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என ஐசிஎம்ஆர் இயக்குநர் பால்ராம் பாரகவா தெரிவித்துள்ளார்.
ஐசிஎம்ஆர் கருத்து
இது குறித்து அவர் கூறுகையில், "கொரோனா 3ஆம் அலை ஏற்படுவதைத் தவிர்க்க 3 விஷயங்களை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5% குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டுமே தளர்வுகளை அறிவிக்க வேண்டும். அதேபோல, கொரோனா வைரசால் எளிதாகப் பாதிக்கக் கூடிய மக்களில் குறைந்தபட்சம் சுமார் 70% பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மூன்றாவதாக கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஊரடங்கு நிரந்தர தீர்வில்லை
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டங்களில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஒரு நிரந்தரமான தீர்வு இல்லை. எனவே, நாம் ஊரடங்கில் தளர்வுகளை மெல்ல அறிவிக்க வேண்டும். கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதன் மூலம், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதைத் தடுத்து நிறுத்தலாம். ஆனாலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளே நமக்கு அதிகபட்ச முன்னுரிமையாக இருக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாசிட்டிவ் விகிதம்
மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை நீக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5% கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் 44% (323) மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5% கீழ் உள்ளது, 19.8% (145) மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 5-10% வரை உள்ளது. 36% (266) மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 10% மேல் உள்ளது. உலக சுகாதார அமைப்பும்கூட 2 வாரங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5% கீழ் இருந்தால் நிலைமை முன்னேறுவதாக அர்த்தம் எனத் தெரிவித்திருந்தது.
தடுப்பூசி பணிகள்
ஆனால், தடுப்பூசி பணிகள் தான் எதிர்பார்த்த அளவு வேகமாக நடைபெறுவதில்லை. இந்தியாவில் கடந்த வாரம் தினசரி 30 லட்சத்திற்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதே வேகத்தில் தடுப்பூசி பணிகள் நடைபெற்றால், நாட்டிலுள்ள அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கவே 256 நாட்கள், அதாவது எட்டு மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.