"ரூ.1 லட்சம் கோடி" நிலுவை! இலவசங்கள்தான் நாட்டை நாசமாக்குகிறது.. திடீரென பொங்கி எழுந்த பிரதமர் மோடி
டெல்லி: தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இலவசங்கள் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
தேர்தல் காலத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இலவச மின்சாரம் தொடங்கி பல்வேறு விஷயங்களை வாக்குறுதிகளாகக் கொடுப்பார்கள். ஆனால், இதற்குக் கட்டுப்பாடு தேவை என்ற குரல் நீண்ட காலமாகவே உள்ளது.
இலவசங்கள் நாட்டின் நிதி நிலைமையைப் பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். தேர்தல் காலத்தில் அறிவிக்கப்படும் வாக்குறுதிகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி
இதனிடையே தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இலவசங்கள் குறித்து சில முக்கிய கருத்துகளைக் குறிப்பிட்டார். ரூ.3 லட்சம் கோடி மிதப்பிலான என்டிபிசியின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இலவசங்கள் நாட்டை சீரழிப்பதாகத் தெரிவித்தார்.

ரூ.1 லட்சம் கோடி
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "சாதாரண மக்கள் தங்களின் மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்துகின்றனர். ஆனால், பல்வேறு மாநிலங்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு மேலான தொகையை நிலுவையில் வைத்துள்ளன. இந்தச் செய்தி உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். நாட்டு மக்கள் அனைவருக்கும் முறையான மின் வினியோகம் கிடைப்பதை உறுதி செய்ய மாநிலங்கள் தங்கள் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்

வீணடிக்கிறோம்
இந்தியாவில் மின்துறை இழப்புகள் இரட்டை இலக்கத்தில் உள்ளன. அதேநேரம் வளர்ந்த நாடுகள் இதனை ஒற்றை இலக்கத்தில் வைத்துள்ளது. அதாவது நாம் அதிகளவில் சக்திகளை வீணடித்து வருவதையே இது காட்டுகிறது. இதனால் தேவையைக் காட்டிலும் அதிக மின்சாரத்தை நாம் உற்பத்தி செய்ய வேண்டி இருக்கிறது.

அரசியலில் எது முக்கியம்
நமது அரசியலில் காலப் போக்கில் பல மோசமான யுக்திகள் புகுந்துவிட்டன. அரசியலில் மக்களுக்கு உண்மையைச் சொல்லும் தைரியம் வேண்டும். ஆனால் சில மாநிலங்களில் பிரச்சினைகளை மறைக்க முயல்கின்றன. இது அரசியல் ரீதியாக உடனடி லாபத்தைக் கொடுப்பதாகத் தோன்றலாம். ஆனால், நீண்ட காலத்தில் இது பெரும் பாதிப்பையே தரும். இன்று நாம் சவால்களை எதிர்கொள்ளாமல் இருப்பது வருங்கால சந்ததியினருக்கு பாரத்தைச் சுமத்துவது போன்றது.

நல்லதல்ல
நமது நாட்டில் மின்சார நிறுவனங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. ஆனால், அவற்றுக்கான கட்டணத்தைப் பெற முடிவதில்லை. மின்சாரம் என்பது அனைவருக்கும் முக்கியமானது. மின்சார உற்பத்தி நிறுவனங்களின் கடனில் இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல. ஒரு மாநிலத்தில் மின்துறை நலிவடைந்தால், அது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று அவர் தெரிவித்தார்.

இலவசங்கள்
மேலும், நாட்டில் அதிகரிக்கும் இலவச கலாசாரம் நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார். இலவச கலாசாரத்திற்கு எதிராகப் பிரதமர் மோடி ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக எச்சித்து உள்ளார். முன்னதாக, கடந்த ஜூலை 16ஆம் தேதி புந்தேல்கண்ட் விரைவுச் சாலையைத் திறந்து வைத்தபோது இலவச கலாசாரம் நீண்ட கால வளர்ச்சியைப் பாதிப்பதாகப் பிரதமர் மோடி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை
இந்தியாவில் கிட்டதட்ட அனைத்து மாநிலங்களில் இருக்கும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் தான் இயங்குகின்றன. இந்த நஷ்டம் காரணமாக மின்சார விநியோக கட்டமைப்பில் தேவையான முதலீடுகளைச் செய்ய முடிவதில்லை. இதனால் மின்சார இழப்பும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.












Click it and Unblock the Notifications