மே.வங்கத்தில் வன்முறை.. கவர்னரிடம், மோடி கவலை.. ''கொரோனாவில் கவனம் செலுத்துங்க''.. திரிணாமுல் பதிலடி
டெல்லி: மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மாநில கவர்னர் ஜெகதீப் தங்கரிடம் பிரதமர் மோடிகேட்டறிந்தார்.
பிரதமர் முதலில் நாட்டில் நிலவும் கொரோனா குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் டெரெக் ஓ பிரையன் தெரிவித்தார்.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 2-ம் தேதி எண்ணப்பட்டது.
"13450 கோடி.." புது பில்டிங் கட்ட போறீங்களா, மக்களை காக்க போகிறீர்களா..மோடிக்கு ராகுல் கேள்வி
திரிணாமுல் ஹாட்ரிக் வெற்றி
சுமார் 200 இடங்களுக்கும் மேல் பெற்ற மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஹாட்ரிக் வெற்றி பெற்றது. மம்தாவுக்கு கடும் போட்டி அளிக்கும் என்று கருதப்பட்ட பாஜக பரிதாபமாக சரண் அடைந்தது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜக சுவேந்து அதிகாரியிடம் தோல்வியை தழுவினார்.
கடும் வன்முறை
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும்போதே நந்திகிராமிலும், மாநிலத்தின் பல பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. பாஜக தொண்டர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. பாஜகவினரின் கடைகள், வீடுகள் தீ வைத்து அடித்து நொறுக்கப்பட்டதாவும், இந்த வன்முறையில் 6 பாஜகவினர் கொல்லப்பட்டனர் எனவும் குற்றம்சாட்டப்பட்டன.
உள்துறை விளக்கம் கேட்டது
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.திரிணாமூல் தொண்டர்கள் வன்முறையை தூண்ட வைக்கும் பாஜகவினரின் முயற்சிகளுக்கு பலியாகி விடக் கூடாது எனவும் அமைதி காக்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மாநில கவர்னர் ஜெகதீப் தங்கரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
மோடி கவலை
இது தொடர்பாக ஜெகதீப் தங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி கவலைக்குரிய சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்து கடுமையான வேதனையையும் கவலையையும் வெளிப்படுத்தினார். வன்முறை காழ்ப்புணர்ச்சி, தீ விபத்து, கொள்ளை மற்றும் கொலைகள் தடையின்றி தொடர்கின்றன என்ற கடுமையான கவலைகளை நான் பகிர்ந்து கொள்கிறேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார் என்று ஜெகதீப் தங்கர் கூறினார். இதற்கிடையே திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் டெரெக் ஓ பிரையன், '' பிரதமர் முதலில் நாட்டில் நிலவும் கொரோனாவை விரட்ட கவனம் செலுத்த வேண்டும்'' என்று கூறினார்.