களைகட்டும் சென்னை செஸ் ஒலிம்பியாட்.. ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமர்.. 75 நகரங்களுக்கு பயணம்
டெல்லி: சென்னையில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை டெல்லி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தொடங்கி வைக்கவுள்ளார்.
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. வரும் ஜூலை 28ம் முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் நடைபெறவுவுள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் பங்கேற்கவுள்ளனர். இதில் 189 அணிகள் பொது பிரிவு போட்டிகளிலும், 154 அணிகள் மகளிர் பிரிவிலும் கலந்துகொள்கின்றனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் உலகம் முழுவதிலும் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியை நடத்த ரூ.92.13 கோடியை ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்தத் தொடரை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்த சிறப்பு அதிகாரி தலைமையில் குழு அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா தரப்பில் 4 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரு ஆடவர் அணிகள், இரு மகளிர் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணிக்கு ஜாம்பவான் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக்கை போலவே செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு ஜோதி ஓட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜோதி ஓட்டம் இந்தியாவில் தொடங்கி, உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நடப்பு தொடரில் போதிய நேரமின்மை காரணமாக இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு மட்டும் ஜோதி ஓட்டம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் செஸ் விளையாட்டை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்த நிலையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதி ஓட்டத்தை இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் டிவோர்கோவிச் முறைப்படி ஜோதியை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கிறார். இதனைத்தொடர்ந்து கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம், பிரதமர் மோடி ஜோதியை ஒப்படைப்பார். செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம், 40 நாட்கள் இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் வலம் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications