"முதல்முறை" பிரிட்டன் மன்னருடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேச்சு.. ஜி20 மாநாடு குறித்து ஆலோசனை!
டெல்லி: பிரிட்டன் மன்னராக பொறுப்பேற்ற மூன்றாம் சார்லஸ், முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், காமன்வெல்த் மற்றும் ஜி20 மாநாடு உள்ளிட்டவை குறித்து பேசியதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை இரண்டாம் எலிசபெத் பெற்றிருந்தார்.
ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கபட்டார். 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர் என்ற பெருமையும் 3ம் சார்லஸ் பெற்றார்.

மன்னர் 3ம் சார்லஸ்
கடந்த மாதம் பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற எளிய விழாவில், மன்னராக பிரகடனப்படுத்தப்படுவதற்கான ஆவணத்தில் மூன்றாம் சார்லஸ் கையெழுத்திட்டார். பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா வரும் ஜூன் மாதம் 3ம் தேதி லண்டனில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

ஜி20 மாநாடு
இதனிடையே 2023ம் ஆண்டுக்கான ஜி20 மாநாட்டை நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. டெல்லியில் 2023 செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னேற்பாடு கூட்டங்களை நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜி20 அமைப்பின் உறுப்பினர்கள்
வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 1999ல் தொடங்கப்பட்ட ஜி20 அமைப்பில் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சவுதி அரேபியா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளன.

மோடி - 3ம் சார்லஸ்
இந்த நிலையில் ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் தொலைபேசியில் பேசியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், பல்லுயிர் பாதுகாப்பு, எரிசக்தி மாற்றத்திற்கான தீர்வுகள் மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட இருதரப்பு நலன்கள் குறித்து மன்னர் 3ம் சார்லசுடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல்முறை
மேலும், இந்தியாவின் ஜி20 தலைமையின் முன்னுரிமைகள் குறித்து விவாதித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே வாழும் பாலமாக செயல்பட்டு இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் இங்கிலாந்தில் வாழும் இந்திய மக்கள் மகத்தான பங்களிப்பை தருவதாக இரு தலைவர்களும் பாராட்டினர். இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்ற பின் முதல்முறையாக பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக அவருடன் உரையாடியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications