பூரி ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்தால் கடவுள் ஜெகநாதர் மன்னிக்க மாட்டார் - உச்சநீதிமன்ற நீதிபதிகள்
கொரோனா நோய் தொற்று பரவி வரும் இந்த கால கட்டத்தில் பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி தீர்ப்பளித்துள்ளனர்.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை நடத்த அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கூறியுள்ளனர். தொற்றுநோய் பரவும் சமயத்தில் ரத யாத்திரை நடத்த அனுமதி கொடுத்தால் பகவான் ஜெகநாதரே எங்களை மன்னிக்க மாட்டார் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ரத யாத்திரை நடைபெறும். புகழ்பெற்ற இந்த ரத யாத்திரை இந்த ஆண்டு வரும் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் இந்த ரத யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் பல விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. ரத யாத்திரை விழாவை கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த ஒடிசா மாநில உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது. ரதங்களை இழுக்க ராட்சத எந்திரங்கள் அல்லது யானைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
ரத யாத்திரை விழா 23ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் ரத யாத்திரை நடத்துவதற்கு எதிராக ஒடிசா விகாஸ் பரிஷத் அமைத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ஒடிசாவின் கடலோர மாவட்டத்தில் வருடம்தோறும் நடைபெறும் ரத யாத்திரையில் சுமார் 10 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்றும், இந்த மத நிகழ்வு 10 முதல் 12 நாட்கள் வரை நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.
தந்தையர் தினம் 2020 : உங்கள் அப்பாவின் பெருமைகளை எங்களுக்கும் சொல்லுங்கள்
ஒடிசா அரசு அனுமதி கிடையாது
கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் இந்த ரத யாத்திரை நடைபெற்றால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிப்படைவதற்கான அழைப்பாக இருக்கும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர். ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பாக மத வழிபாட்டு தலங்களை திறக்க ஒடிசா அரசு அனுமதி அளிக்கவில்லை. அதனால் ரத யாத்திரையை அனுமதிப்பது மாநில அரசின் உத்தரவை மீறும் செயல் என்றும் தெரிவித்திருந்தது.
அனுமதி கிடையாது
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்த பின்னர் தீர்ப்பளித்த நீதிபதிகள், கொரோனா நோய் தொற்று பரவும் இந்த சூழ்நிலையில் ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை மற்றும் அது தொடர்பான விழாக்கள் நடத்த அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர்.
மக்களின் பாதுகாப்பு முக்கியம்
சுகாதார வல்லுநர்களின் ஆலோசனையை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், மோசமான தொற்றுநோயான கொரோனா வைரஸ் சுவாச நீர்த்துளிகள் மூலமாக பரவக்கூடும் என்பதால் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். நெரிசலான சூழலில் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கும் என்று தெரிவித்தனர். இதன் காரணமாக பொது சுகாதாரம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பிற்காக இந்த ஆண்டு ரத யாத்திரையை அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
பூரி ஜெகநாதர் மன்னிக்க மாட்டார்
10 ஆயிரம் பேர் மட்டுமே ரத யாத்திரையில் பங்கேற்றாலும் அதுவும் ஒரு தீவிரமான விசயம் என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார். தொற்றுநோய் பரவும் சமயத்தில் ரத யாத்திரை நடத்த அனுமதி கொடுத்தால் பகவான் ஜெகநாதரே எங்களை மன்னிக்க மாட்டார் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.