மாஸ் காட்டிய காங்கிரஸ்.. இறங்கி வந்த போலீஸ்.. ஹத்ராஸில் ராகுல் காந்தி, பிரியங்கா!
டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பட்டியலின பெண்ணின் குடும்பத்தாரை காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழுவினர் கார் மூலம் ஹத்ராஸ் வந்து சந்தித்தனர்.
Recommended Video
இரு தினங்களுக்கு முன்பு ஹத்ராஸ் செல்ல முயன்றபோது போலீசாரால் இருவரும் கைது செய்யப்பட்டனர். ராகுல் காந்தியை போலீசார் பிடித்து கீழே தள்ளியதில் தலைகுப்புற விழுந்தார். பின்னர் ராகுல், பிரியங்கா இருவரும் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.

நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த சம்பவம். நாடு முழுக்க எதிர்க்கட்சி தலைவர்கள் இதுகுறித்து கண்டனங்களை பதிவு செய்தனர். ராகுல் காந்தியை கீழே தள்ளியதை கண்டித்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
தான் யாருக்கும் பயப்படப்போவதில்லை என்று ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்தார். இந்த நிலையில், இன்று மீண்டும் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஹத்ராஸ் செல்வதாக அறிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் குழுவுடன், தான் செல்ல இருப்பதாகவும், ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் மீண்டும் தடுப்பார்களா இல்லையெனில் அனுமதிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது.
டெல்லியிலிருந்து இருவரும் காரில் கிளம்பினர். இவர்களுடன் பல்வேறு வாகனங்களில் நூற்றுக் கணக்கான தொண்டர்கள் வருகை தந்தனர். காங்கிரஸ் கட்சியினர் ஆக்ரோஷமாக இருப்பார்கள் என்பதை அறிந்த காவல்துறையும் டெல்லி-நொய்டா எல்லையில் நூற்றுக்கணக்கான போலீசாரை குவித்தது. தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் பீச்சி அடிக்கும் வண்டிகள் நிறுத்தினர்.
ராகுல் காந்தி வருவதாகக் கூறியதால், உத்தரபிரதேச நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பெரும் மோதல் ஏற்படும் நிலை உருவானது. ஆனால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழுவை மட்டும் ஹத்ராஸ் செல்ல அனுமதிப்பதாக இறங்கி வந்தது காவல்துறை.

இதையடுத்து, காரிலிருந்து இறங்கி வந்து தொண்டர்களிடம் சில வினாடிகள் பேசினார். அப்போது தங்களுக்கு ஹத்ராஸ் செல்ல அனுமதி கிடைத்திருப்பதை தெரிவித்து, தொண்டர்கள் நன்றி கூறினார். பிறகு காங்கிரஸ் தலைவர்கள் கார்கள் மட்டும் ஹத்ராஸ் நோக்கி கிளம்பின.
அப்போது பிரியங்கா காந்தி, இன்னோவா காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்து, தான் கார் ஓட்டுவதாகக் கூறி, ராகுலை பக்கத்தில் அமர சொன்னார். ராகுலும் உடனே இன்னோவா காரில் அமர்ந்தார். பிரியங்கா இன்னோவா காரை இயக்கினார்.
நொய்டா பார்டரிலிருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமத்திற்கு இரவு 7.40 மணி அளவில் இரு தலைவர்களும் சென்றடைந்தனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.












Click it and Unblock the Notifications