பேரழிவுகளை மறைக்க முடியாது.. திண்டாடும் மக்களை திசை திருப்பாதீங்க.. மோடியை விமர்சிக்கும் ராகுல்
டெல்லி: நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி போராடிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் கவனத்தை திசை திருப்பும் அடுத்த விஷயத்துக்கு பிரதமர் மோடி திட்டமிடுகிறார் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்தும், தவறுகளையும் கண்டித்தும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அண்மையில் ஓய்வூதியமின்றி 4 ஆண்டுகளுக்கு மட்டுமே ராணுவ சேவையாற்றும் இளைஞர்களுக்கான அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்தார். அந்த வகையில், விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்கள் எப்படி மத்திய பாஜக அரசால் திரும்ப பெறப்பட்டதோ, அதேபோல் அக்னிபாத் திட்டமும் திரும்பப்பெறப்படும் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் ஆவேசமான போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளது.
இதனிடையே காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் சாடியுள்ளார். அந்தப் பதிவில், திசை திருப்பும் வேலையில் பிரதமர் மோடி கைதேர்ந்தவராக இருக்கிறார். இருந்தாலும் அவரால், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு, எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பு சரிவு உள்ளிட்ட மத்திய அரசின் சொதப்பல்களை மறைக்க முடியவில்லை. டி.எச்.எப்.எல். போன்ற மிகப்பெரிய வங்கி மோசடி பேரழிவுகளை மறைக்க முடியாது. இந்திய மக்கள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி போராடிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் கவனத்தை திசை திருப்பும் அடுத்த விஷயத்துக்கு பிரதமர் மோடி திட்டமிடுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

நாளை காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில், ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. தொடர்ந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் புதிய வழிகளை மத்திய பாஜக அரசு கண்டறிய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுமட்டுமன்றி மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் சிறு குறு தொழிலாளர்களை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.












Click it and Unblock the Notifications