இந்துத்துவாவை வெறுக்க ராகுலுக்காவது காரணம் இருக்கு! கெஜ்ரிவால் ஏன் எதிர்க்கிறார்? பாஜக புள்ளி கேள்வி
டெல்லி: இந்துத்வாவை வெறுப்பதற்கு ராகுல் காந்திக்கு காரணம் உள்ளது என்றும் ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் இந்துத்வாவை வெறுப்பதற்கு என்ன காரணம் உள்ளது என்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 5-ஆம் தேதி விஜயதசமி பண்டிகையின் போது நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கெளதம் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியது பெரும் சர்ச்சையையும் விமர்சனங்களையும் எழுப்பியது.

விஷ்ணு, சிவன் மீது நம்பிக்கை இல்லை
ராஜேந்திர பால் கவுதம் பேசுகையில், ''எனக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மீது நம்பிக்கை இல்லை. எனவே அவர்களை நான் வழிபட மாட்டேன். கடவுளின் அவதாரமாக கூறப்படும் ராமர் மீதும், கிருஷ்ணர் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. இதனால், அவர்களையும் நான் வழிபட போவது இல்லை. விஷ்ணுவின் அவதாரமே புத்தர் எனக் கூறப்படுவது பொய்ப் பிரச்சாரம்'' என்றார். டெல்லி சமூக நலத்துறை அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதோடு சர்ச்சையை கிளப்பியது.

அவமதிக்க வேண்டும் என நினைக்கவில்லை
இந்த விவகாரத்தில் பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக சாடியது. அமைச்சர் கவுதமின் கருத்து ஆம் ஆத்மி கட்சி இந்துக்கள் மீதுள்ள கொண்டுள்ள வெறுப்பை காட்டுகிறது என்று பாஜக விமர்சித்தது. இந்த நிலையில், தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அமைச்சர் கவுதம் தனது கருத்துக்கு விளக்கம் அளித்தார். இது தொடர்பாக கவுதம் கூறுகையில், 'தனிப்பட்ட முறையில் நான் அனைத்து தெய்வங்களையும் மதிக்கிறேன். எந்த தெய்வத்தையும் அவமதிக்க வேண்டும் என கனவில் கூட நினைத்தது இல்லை' என்றார்.

பாஜகவின் செயல்கள் காயப்படுத்தியது
மேலும் அவர் பதிவிட்டுள்ள ட்விட் பதிவில், ''அனைவரின் நம்பிக்கையையும் நான் மதிக்கிறேன். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பணவீக்கம் மற்றும் சமூக சமத்துவம் ஆகியவை பற்றியே நான் பேசினேன். ஆனால், பாஜகவினரோ எனக்கு எதிராக பொய்பிரச்சாரங்களை பரப்புகின்றனர். பாஜகவினர் செயல்கள் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. பாஜகவின் இந்த போலி பிரசாரங்களால் வருத்தம் அடைந்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று பதிவிட்டு இருந்தார்.

இந்துக்களையும்.. இந்துத்தாவையும்..
இருந்தாலும், இந்த விவகாரத்தை வைத்து ஆம் ஆத்மி கட்சியை விடாமல் பாஜக தாக்கி வருகிறது. அந்த வகையில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் தன் பங்கிற்கு ஆம் ஆத்மி கட்சியை சாடியுள்ளார். இது தொடர்பாக கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- இந்துக்களையும்.. இந்துத்வாவையும் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது சகாக்களும் ஏன் இப்படி வெறுக்கிறார்கள்.

ஏன் வெறுக்கிறார்
இதற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ராகுல் காந்தி வெறுப்பதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் ஏன் வெறுக்கிறார் என்று புரியவில்லை'' என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications