ராகுல் என்னை விட பெரியவர்! நான் அவருக்கு சமமானவன் அல்ல! பிரசாந்த் கிஷோர் பரபர
டெல்லி: ‛‛ராகுல்காந்தி என்னை விட பெரிய மனிதர். நான் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன். நான் ராகுல்காந்திக்கு சமமானவன் அல்ல'' என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறினார். காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்த பிரசாந்த் கிஷோர் தற்போது இந்த கருத்தை தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அக்கட்சியில் இணைவதாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை தொடர்ச்சியாக சந்தித்தார்.
விரைவில் நடைபெற உள்ள குஜராத், சத்தீஸ்கார் மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தல் தொடர்பான வியூகங்கள், ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தியிடம் கூறினார்.
ராகுல்காந்தி எளிமையான நபர்! சர்ச்சைகளுக்கு மத்தியில் நேபாள பாடகி சரஸ்வோட்டி காத்ரி பாராட்டு
காங்கிரஸில் இணைய மறுப்பு
இந்த வேளையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைய மறுத்துவிட்டார். கட்சியில் உயரதிகாரம் கொண்ட பதவி கிடைக்காதது, தேர்தல்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் கிடைக்காதது ஆகியவற்றால் தான் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய மறுத்ததாக கூறப்படுகிறது.
பாதயாத்திரை
இதற்கிடையே பிரசாந்த் கிஷோர் புதிதாக அரசியல் கட்சி துவங்க உள்ளதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் இன்று பீகாரில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, ‛‛ 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்க இருக்கிறேன். அக்டோபர் 2ஆம் தேதி 3,000 கிமீ தூரம் பீகாரின் சம்பாரனில் இருந்து தொடங்க உள்ளேன். அடுத்த மூன்று-நான்கு ஆண்டுகளுக்கு நான் மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பேன். எனக்கு இப்போது கட்சியோ, மேடையோ இல்லை. பீகாருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் மட்டுமே உள்ளது'' என்றார். பிரசாந்த் கிஷோரின் இந்த கருத்து மூலம் அவர் தற்போதைக்கு கட்சி துவங்க மாட்டார் எனவும், மக்களை சந்தித்த பிறகு கட்சி துவங்கலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பிரசாந்த் கிஷோரிடம் கேள்வி
இந்நிலையில் தான் என்டிடிவி சார்பில் பிரசாந்த் கிஷோரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் அவர் இணையாதது பற்றியும், 2வது சுற்று பேச்சுவார்த்தையில் ராகுல்காந்தி பங்கேற்காதது பற்றியும் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பிரசாந்த் கிஷோர் பதிலளித்தார். அவர் கூறியதாவது:
ராகுல்காந்தி மிகப்பெரியவர்
ராகுல் காந்தி மீது எனக்கு எந்த விரக்தியும் இல்லை. ராகுல் காந்தி பெரிய மனிதர். நான் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன். ராகுல் காந்தியைப் போல உயர்ந்த ஒருவருடன் எனக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்?. அவருடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ராகுல்காந்தி என்னை அழைத்து பேசினார். அவர் என்னை அழைத்து பேசாமல் இருந்தாலோ? இல்லை பேச வேண்டாம் என கூறினாலோ நான் பேசி இருக்கமாட்டேன்.
சமமானவன் அல்ல
மேலும் நாங்கள் இருவரும் சமமானவர்கள் என கருதுவதில் குறைபாடு உள்ளது. நான் ராகுல்காந்திக்கு சமமானவன் அல்ல'' என்றார். காங்கிரஸ் கட்சி உடனான பேச்சுவார்த்தையின்போது பிரசாந்த் கிஷோரை ராகுல்காந்தி சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கேள்வி எழுப்பியதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
நான் தேவையில்லை
மேலும், ‛‛காங்கிரஸ் கட்சி உடனான உறவு முடிந்துவிட்டதா இல்லை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா'' என கேள்வி எழுப்பப்பபட்டது. அதற்கு பிரசாந்த் கிஷோர் ‛‛உறவு முடிந்ததா, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு இடமில்லை. கட்சி மேற்கொள்ள வேண்டியது குறித்த ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ள அனுமதிப்பது தான் பெரிய விஷயமாக இருந்தது. என்னுடைய ஆலோசனையை ஏற்க வேண்டுமா? வேண்டாமா? என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். காங்கிரசுக்கு பிரசாந்த் கிஷோர் தேவையில்லை. காங்கிரஸில் பிரசாந்த் கிஷோரை விட அதிகம் தெரிந்த திறமையான அனுபவம் நிறைந்த பலர் உள்ளனர்'' என கூறினார்.