பெகாசஸ், பெட்ரோல் விலை உயர்வு... நாடாளுமன்றம் அருகே ராகுல்காந்தி சைக்கிள் பேரணி
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராகுல்காந்தி இன்று சைச்கிளில் நாடாளுமன்றத்திற்கு பேரணியாக சென்றார். எதிர்கட்சி எம்பிக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் சைக்கிளில் சென்றார் ராகுல்காந்தி.
டெல்லி: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி நடத்தினார் ராகுல்காந்தி. டெல்லியில் எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசித்த பின்னர் நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்றார். கடந்த வாரம் டிராக்டர் பேரணி நடத்திய நிலையில் இந்த வாரம் சைக்கிள் பேரணி நடத்தியுள்ளார் ராகுல்காந்தி.
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் முக்கிய நபர்களின் செல்போன் போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. அதன்படி, இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களாக நாடாளுமன்றமே முடங்கியுள்ளது. நாடு முழுவதும் பெகாசஸ் விவகாரம் புயலைக் கிளப்பி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினர்.
டெல்லியில் உள்ள அரசியலமைப்பு கிளப்பில் நடைபெற்ற பிரேக்பாஸ்ட் கூட்டத்தில் 15 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று ராகுல்காந்தி பேசினார்.
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சீர்திருத்த சட்டங்கள், எரிபொருள் விலை உயர்வு குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆளுங்கட்சியை திணறடிக்க மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்தும் திட்டமிடப்பட்டது.
இதனையடுத்து சைக்கிள் பேரணி நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு நாடாளுமன்றத்திற்கு எதிர்கட்சி எம்பிக்களுடன் சைக்கிள் பேரணி நடத்தினார் ராகுல்காந்தி. வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் கடந்த வாரம் ராகுல்காந்தி டிராக்டர் பேரணி நடத்தினார்.
இன்றைய தினம் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக சைக்கிள் பேரணி நடத்தியுள்ளார் ராகுல்காந்தி. பெகசாஸ் விவகாரம் தொடர்பாக இன்றும் அமளி ஏற்படவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.