ராகுலின் பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்கும்.. ஒன்று திரளும் எதிர்க்கட்சிகளும்.. திகுதிகு டெல்லி
டெல்லி: பப்பு (குழந்தை) என பாஜகவினரால் ட்ரால் செய்யப்பட்ட ராகுல் இன்று வளர்ந்த வாலிப பிள்ளையாக பாஜகவினருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளார். பெகாசஸ் விவகாரத்தை அஸ்திரமாக மாற்றி எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் வல்லமை பெற்றதால் இன்று பப்பு வச்சிட்டாரு ஆப்பு என்று காங்கிரஸார் பெருமையோடு பேசிக்கொள்கிறார்கள்.
வலிமை மிக்க மோடி, அமித்ஷா தலைமையில் பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தபோது காங்கிரஸுக்கு கைகொடுத்த மாநிலம் கேரளாவும், தமிழகமும்தான். தமிழகத்தில் திமுக கூட்டணி வலிமையாக இருந்ததால் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றது. ஆனால் மொத்தத்தில் ராகுல் காந்திக்கு அது பெரிய பின்னடைவாக இருந்தது.
இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்!
ராகுல் தலைமையை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்தன, தொடர்ந்து பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி காரணமாக ராகுல் தலைமை பதவியை விட்டு ஓடினார். தெளிவான தலைவர் அல்ல ராகுல் அவர் பப்பு என பாஜகவினர் விமர்சித்தனர். எதைப்பற்றி பேசினாலும் பப்பு என்று கூறி ஒரே வரியில் ராகுல் காந்தியை முடக்கினர்.
காங்கிரஸுக்குள் சிக்கல்
ஆனால் ராகுல் காந்தி பப்புவா என்றால் இல்லை. அவரது அரசியல் வழக்கமான காங்கிரஸாரின் பந்தா அரசியல் போல் இல்லாததும், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து மூத்தத் தலைவர்களின் ஆதிக்கமும் காங்கிரஸை விட்டு பலர் பாஜகவுக்கு செல்லும் நிலையை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தியின் தலைமையில் பிரச்சினை வந்தபோது உ.பி போன்ற மாநிலத்துக்கு பிரியங்காவை கொண்டு வந்தனர். அதன் பின்னர் ராகுல் தொடர்ந்து கட்சித்தலைமை பொறுப்பை ஏற்க மறுத்து வருகிறார். பாஜக மீது அவர் வைத்த குற்றச்சாட்டுகள் பாஜக தலைவரின் வாதத்தின் முன் எடுபடவில்லை.
‘பப்பு’ என ட்ரால்
இந்த நிலையில் தான் சிஏஏ, வேளாண்சட்டங்கள் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அதை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து போராட்டம் நடத்தின. இடையில் கொரோனா பரவல் குறித்து ராகுல் காந்தி 2019 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே எச்சரித்தார். மிகப்பெரும் நோய்த்தொற்று பரவும் அதைவிட அதனால் வரும் பொருளாதார பாதிப்பை நினைத்தால் அச்சமாக இருக்கு என அவர் பேசியதை வழக்கம் போல் பப்பு என புறந்தள்ளினர்.
ஆனால் ராகுல் சொன்னது நடந்தது. அதன்பின்னர் கொரோனா பரவல், தடுப்பூசி போன்ற விவகாரங்களை கையிலெடுத்த ராகுல் வேகமாக அரசியல் செய்ய ஆரம்பித்தார். ஆனாலும் ராகுலுடனும், காங்கிரஸ் கட்சியிடனும் இணைய எதிர்க்கட்சிகள் தயக்கம் காட்டின.
மம்தாவை சீண்டிய பாஜக
இதற்கிடையே மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக காட்டிய வேகம் மம்தாவுக்கு ஏற்பட்ட இழப்பு அவரை சீண்டிவிட்டது. அதுவரை பாஜகவை தனியாக எதிர்க்கலாம் என்று நினைத்தவர் யதார்த்தம் அது அல்ல என உணர்ந்து காங்கிரஸுடன் கைகோர்க்க முடிவெடுத்தார். இதேப்போன்று பிரசாந்த் கிஷோரும் காங்கிரஸில் இணைய 3 தடவைக்கு மேல் ராகுலுடன் சந்திப்பை நடத்தினார்.
தோல்வி அடைந்த டீ பார்ட்டி
இதனிடையே சமீபத்தில் ராகுல் ஒரு பிரச்சினைக்காக டீ பார்ட்டி ஒன்றை வைத்தார். அதற்கு எதிர்க்கட்சிகளை அழைத்தார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணித்தது. அதைவிட முக்கியமானது மஹாராஷ்டிராவில் காங்கிரஸின் கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸும், சிவசேனாவும் புறக்கணித்ததுதான் ஹைலைட்.
பெகாசஸ் எனும் பூகம்பம்
இந்த நிலையில் தான் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் திடீர் விஸ்வரூபம் எடுத்தது. அரசுகள் மட்டுமே ஒப்பந்தம் போடும் அந்த நிறுவனத்துடன் இந்தியாவுக்கு இருக்கும் தொடர்பு என்ன என்பதுதான் தற்போது எதிர்க்கட்சிகளின் கேள்வி. தொடர்பு இல்லை என மறுக்க முடியாமலும், அதில் அரசின் பங்கு என்ன என்றும் இதுவரை மத்திய அரசு வாய் திறக்கவில்லை.
வாட்டர் கேட் ஊழல்
பாஜகவில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி போன்றோர்களே இந்த விவகாரத்தில் மத்திய அரசு உண்மையை வெளிக்கொணராவிட்டால் அமெரிக்காவின் வாட்டர் கேட் விவகாரம் போல் இது வெடிக்கும் என விமர்சிக்கும் அளவு இந்த விவகாரம் பெரிதாகியுள்ளது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுமே முடங்கியுள்ளன.
மம்தாவின் டெல்லி விசிட்
இதனிடையே மம்தா பானர்ஜினியின் டெல்லி விசிட்டும் அதில் தனது முந்தைய கட்சியின் தலைவி சோனியாவை சந்தித்து பேசியதும் பெரிய மாற்றத்தை டெல்லி அரசியலில் ஏற்படுத்தியுள்ளது எனலாம். சந்திப்புக்குப்பின் பேட்டி அளித்த மம்தா இனி எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரட்ட வேண்டிய அவசியமில்லாமல் தானாக திரளுவார்கள் என்று தெரிவித்தார்.
டிஃபன் பார்ட்டி
பிரச்சினை இவ்வாறு போய்க்கொண்டிருக்க இன்று காலை டெல்லியில் ராகுல் காந்தி அளித்த டிஃபன் பார்ட்டி பெரிய அளவில் இந்திய அளவில் பேசப்படுகிறது. இன்று ராகுல் கூட்டிய கூட்டத்தில் திரிணமுல் கட்சி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, இடதுசாரி கட்சிகள் கலந்துக்கொண்டது எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதில் ராகுல் வெற்றிப்பெற்றுள்ளதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
சைக்கிள் பேரணி, டென்ஷனில் பாஜக
டிஃபன் பார்ட்டியும், அதைத்தொடர்ந்து நடந்த சைக்கிள் பேரணியையும் அடுத்து பிரதமரே பாஜக அவசரக்கூட்டத்தை கூட்டும் நிலையை உருவாக்கியுள்ளது. ராகுல் வழக்கமான பாப்பு அல்ல வளர்ந்த வாலிபராக வலிமையுடன் இருக்கிறார் என்பதை பாஜகவின் இந்த கூட்டம் காட்டுகிறது, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வது அடுத்து வரும் 5 மாநில தேர்தல்களிலும், 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை நீடிக்குமா? காலம் தான் பதில் சொல்லும்.