இதுதான் உங்க புத்தாண்டு பரிசா? சர்ரென உயர்ந்த சிலிண்டர் விலை.. ராகுல் காந்தி கிண்டல்!
டெல்லி: ஆங்கில புத்தாண்டான இன்று வணிக பயன்பாட்டு சிலிண்டருக்கான விலை உயர்த்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
ஒவ்வொரு மாதம் தொடங்கும்போது முதல் நாளில் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் புத்தாண்டான இன்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.25.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைநகர் டெல்லியில் ஒரு சிலிண்டர் ரூ.1,769 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் ரூ.1,721 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,870 ஆகவும், சென்னையில் ரூ.1,917 ஆகவும் சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் எரிபொருள் இறக்குமதி செய்யும் செலவு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் விலை நிர்ணயிக்கப்பட்டாலும் கூட ஒரே மாதத்தில் இரண்டு மூன்று முறை கூட விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

மானியமில்லா சிலிண்டர்
வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலையானது இப்போது உயர்த்தப்படவில்லை என்றாலும் கூட கடந்த இரண்டு ஆண்டில் இந்த விலை கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதாவது கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் மானிய சிலிண்டர் விலையானது ரூ.710 ஆக இருந்தது. அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த விலை ரூ.1,000ஐ நெருங்கியது. அதேபோல மானியமில்லா சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் மானியமில்லா சிலிண்டர் விலையானது ரூ.694 ஆக இருந்தது. மிகச்சரியாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இதன் விலையானது 1,170 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது.

அதிருப்தி
இதனால் வணிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறுபுறம் பெட்ரோல், டீசல் விலை எதுவும் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக உயர்த்தப்படவில்லை. இந்த விலையுயர்வை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி "புத்தாண்டுக்கான முதல் பரிசு இது" என்று விமர்சித்துள்ளார். மேலும், "இது வெறும் தொடக்கம்தான்" என்றும் கூறியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த 8 ஆண்டுகளில் கேஸ் சிலிண்டர் விலையானது சுமார் 144 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் மானியத்துடன் கூடிய கேஸ் சிலிண்டரின் விலை ரூ.410 ஆக இருந்தது. இது கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் ரூ.1,003 ஆக இருந்தது.

காரணம்
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்த சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்த காலகட்டம் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெற்ற நேரமாகும். தேர்தல் முடிந்த பின்னர் மார்ச் மாதமே மீண்டும் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. பிறகு மே மாதம் 7ம் தேதியும், 19ம் தேதியும் விலை உயர்த்தப்பட்டது. அப்போதுதான் சிலிண்டர் விலை ரூ.1,000ஐ தொட்டது. இந்த விலையுயர்வுக்கு ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சொல்லப்பட்டது. ரஷ்யா மட்டுமே சுமார் 24 சதவிகிதம் அளவுக்கு கேஸ் விநியோகத்தை செய்கிறது.

கச்சா எண்ணெய் விலை
ஆனால் தற்போது போர் முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோல கச்சா எண்ணெய் விலையும் கடந்த ஓராண்டுக்கு இல்லாத அளவு தற்போது குறைந்திருக்கிறது. இப்படி இருக்கையில் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்ப தொடங்கியுள்ளன. இந்த 2023ம் ஆண்டில் பணவீக்கம் குறைந்து எல்லாம் சீரான நிலைக்கு வரும் என மத்திய நிதியமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications