நாங்க இந்துக்கள் அல்ல.. எங்கள் மதம் சர்னா! திரௌபதி முர்மு சார்ந்த.. 5 மாநில பழங்குடியினர் போராட்டம்!
டெல்லி : நாங்கள் இந்துக்கள் அல்ல, எங்களை 'சர்னா' எனும் மதமாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி 5 மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் டெல்லியில் நேற்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ள நிலையில், பழங்குடியின மக்கள் டெல்லியில் இந்த கோரிக்கையை எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஆதிவாசிகளான நாங்கள் இந்துக்களோ கிறிஸ்தவர்களோ இல்லை. எங்களுக்கென சொந்த வாழ்க்கை முறை, மதப் பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் சிந்தனைகள் உள்ளன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஜக ஜனாதிபதி வேட்பாளர்
ஒடிசா மாநிலத்தில் உள்ள சந்தால் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது பாஜக. மயூர்பஞ்ச் மாவட்டம் பைதபோசி கிராமத்தில் பிறந்த பழங்குடியினத்தவரான திரௌபதி முர்மு ரைராங்பூர் சட்டப்பேரவை தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக 2000 முதல் 2009 வரை பதவி வகித்தார். பாஜக கூட்டணி அரசில் அமைச்சராகவும் பதவி வகித்தார். 2015-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். திரௌபதி முர்மு இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத்தலைவராக வர இருக்கிறார்.
டெல்லியில் போராட்டம்
இந்நிலையில், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் உள்ள பல்வேறு பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த ஏராளமானோர் நேற்று தலைநகர் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு தங்கள் மதத்தை 'சர்னா' என்று அங்கீகரித்து, அடுத்து வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சர்னா மதத்தின் கீழ் தங்கள் எண்ணிக்கையை கணக்கெடுத்து உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்னா மதம்
சர்னா தர்ம நெறிமுறைக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த போராட்டக்காரர்கள் உறுதிமொழி எடுத்து, தங்கள் தெய்வங்களின் ஆசீர்வாதம் வேண்டி, ஜந்தர் மந்தரில் வெகுஜன பிரார்த்தனை நடத்தினர். ஜூன் 30, 1855 அன்று ஆங்கிலேயருக்கு எதிராக சந்தால் கிளர்ச்சி தொடங்கியதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
"எங்கள் மதத்தை 'சர்னா' என்று மத்திய அரசு அங்கீகரித்து, இந்த வகையின் கீழ் ஆதிவாசிகளின் கணக்கெடுப்புக்கான விதியை அரசாங்கம் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து எங்கள் உணர்வுகளை தெரிவித்து கோரிக்கையை வலியுறுத்த விரும்பினோம், ஆனால் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே, எங்கள் கோரிக்கைகள் அடங்கிய குறிப்பாணையை காவல்துறை மூலம் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளோம்" என்று இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஜார்கண்டின் முக்கிய பழங்குடித் தலைவரான சல்கான் முர்மு கூறியுள்ளார்.
Recommended Video
சிலைகளை வணங்குவதில்லை
மேலும் பேசிய அவர், "ஆதிவாசிகளான நாங்கள் இந்துக்களோ கிறிஸ்தவர்களோ இல்லை. எங்களுக்கென சொந்த வாழ்க்கை முறை, மதப் பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் மதச் சிந்தனைகள் இருக்கின்றன. எங்கள் பழக்க வழக்கங்கள் மற்ற மதங்களிலிருந்து வேறுபட்டவை. நாங்கள் இயற்கையை வணங்குகிறோம், சிலைகளை அல்ல. அனைத்து பழங்குடியின மக்களும் இயற்கையை வழிபடுகிறார்கள்.
வர்ணாசிரமம் இல்லை
இந்து மதத்தின் வர்ணாசிரம அமைப்பில் இருக்கும் சமத்துவமின்மைப் போல எங்கள் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை. எங்களின் மத எண்ணங்கள், நடைமுறை, கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் மற்ற மதங்களிலிருந்து வேறுபட்டவை என்பதால், எங்கள் மதத்தை சர்னாவாக அங்கீகரிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இந்துக்கள் அல்ல
மேலும் சல்கான் முர்மு, இந்தியாவில் 12 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் உள்ளனர். நாங்கள் பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மதமாக ங்கீகரிக்கப்படவில்லை. பழங்குடியினரின் மதத்திற்கு மத்திய அரசின் அங்கீகாரம் இல்லாத நிலையில், நாட்டில் உள்ள பட்டியலிடப்பட்ட பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பிற மதங்களைத் தழுவுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
பரபரப்பு
சர்னா என்பதற்கு சந்தாலி மொழியில் வழிபாட்டுத் தலம் என்று பொருள்படுவதால், நாட்டில் உள்ள அனைத்து ஆதிவாசிகளையும் உள்ளடக்கிய மதத்திற்கும் சர்னா என்பது பொதுவான பெயராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் சல்கான் முர்மு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளாரக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவின் இனத்தைச் சார்ந்த சமூக மக்கள், நாங்கள் இந்துக்கள் இல்லை என்றும் தங்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.