உ.பி.யில் கொரோனா கொடுமை.. வயல்களில் எரிக்கப்படும் சடலங்கள், ஊரக வேலை திட்டத்திற்கு வராத தொழிலாளர்கள்
டெல்லி: கொரோனா நோய் பரவல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகமாக இருப்பதாலும், உயிரிழந்தவர்களை விவசாய நிலங்களில் எரியூட்டுவதாலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரத்தின்படி பார்த்தால் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 43 ஆயிரத்து 345 கிராம பஞ்சாயத்துகளில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி 9 லட்சத்து 51 ஆயிரம் பேர் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை பார்த்துள்ளனர்.
அந்த மாநிலத்தில் ஏப்ரல் 15ம் தேதி, உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. எனவே, வெளி மாநிலங்களில் இருந்து பல தொழிலாளர்கள் வாக்குகள் செலுத்துவதற்காக உத்தரப்பிரதேசம் வந்திருந்தனர். இதுவும் இந்த அளவுக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அதிகம் பேர் வேலை பார்ப்பதற்கான ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
அதே நேரம் மே மாதம் 9ம் தேதி மொத்தம் 18 ஆயிரத்து 412 கிராம பஞ்சாயத்துகளில் மட்டும்தான், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றுள்ளன.
மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டும்தான் வேலை பார்த்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அப்படிப்பார்த்தால் மூன்றில் ஒரு பகுதி கிராம பஞ்சாயத்துக்களில் மட்டும்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிகள் நடந்துள்ளன.
அதேநேரம் கடந்த வருடம் முதல் அலை பரவியபோது பலரும் பல மாநிலங்களிலிருந்தும் உத்தரப் பிரதேசத்துக்கே அம்மாநில தொழிலாளர்கள் திரும்பி இருந்தனர். நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்த காலகட்டம் அது. அப்போது தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நிறைய பணியாளர்கள் பணியாற்றினர். ஆனால் கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை கொரோனா நோய் பரவல் காரணமாக இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால்தான் மக்கள் அச்சப்பட்டு பணிகளுக்கு வருவதில்லை என்று ஒரு மூத்த அரசு அதிகாரி தெரிவித்ததாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அது மட்டும் கிடையாது சுடுகாடுகளில் சடலங்களை எரிக்கும் பணி மிகவும் தாமதம் ஆகிறது. அந்த அளவுக்கு அங்கு கொரோனா உயிரிழப்பால், சடலங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக விவசாய நிலங்களில் சடலங்கள் எரியூட்டபடுகின்றன. எனவே விவசாயம் சார்ந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார் மற்றொரு அதிகாரி.
கொரோனா 3வது அலை தாக்கும் முன் தயாராகுங்கள்..ஆக்சிஜன், தடுப்பூசிக்கு உடனடி நடவடிக்கை தேவை - ஹைகோர்ட்
ஏப்ரல் 30 முதல் மாநிலத்தில் ஆக்டிவ் கேஸ்கள் குறைந்து வருகின்றன. சுமார் 65,000 கேஸ்கள் குறைந்துள்ளன.
அதேநேரம் பரிசோதனைகள் அதிகமாகத்தான் உள்ளன. ஆனாலும், சஹரன்பூர், பிலிபிட் போன்ற பல கிராமப்புற மாவட்டங்களில் ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளன.
சஹரன்hபூரில், ஆக்டிவ் கேஸ்கள் ஏப்ரல் 30 அன்று 4,136 ஆக இருந்தன, அவை மே 8 அன்று 7,469 ஆக அதிகரித்துள்ளன, இறப்புகள் 170 முதல் 215 ஆக உயர்ந்துள்ளன.