50 ஆண்டு வட்டி இல்லாத கடன்.. மாநில அரசுகளுக்கு நிர்மலா சீதாராமன் வெளியிட்ட மேஜர் அறிவிப்புகள்
டெல்லி: 50 ஆண்டு வட்டி இல்லாத கடன்கள் மூலம் மாநிலங்களின் உள்கட்டமைப்பு செலவினங்களுக்காக ரூ. 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். புதிய திட்டங்களில் ரூ. 10 லட்சம் கோடி மூலதனத்தை மீண்டும் பயன்படுத்த 2025 - 2030 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது சொத்து பணமாக்குதல் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று காலை 11.02 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டார்கள். தொடர்ந்து அவர்கள் கூச்சலிட கடும் அமளிக்கு மத்தியில் நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். சில நிமிடங்கள் தொடர்ந்து கூச்சலிட்ட எதிர்க்கட்சியினர் பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து அவையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார்.

அப்போது அவர் கூறும் போது, உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கும் பணிகளை எங்கள் அரசு மேற்கொண்டு வருகிறது. அனைவருக்குமான வளர்ச்சி என்ற நோக்கில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்றார். தொடர்ந்து விவசாய துறைக்கு பல்வேறு விஷயங்களை முதலில் அறிவித்தார்.
பருப்பு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பான சாகுபடியை தரும் விதைகள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பருத்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். கிசான் கடன் அட்டை மூலம் 7.7 கோடி விவசாயிகள் குறுகிய கால கடன்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் கூறினார்.
அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் பீகாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் மற்றும் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் (நிஃப்டம் - NIFTEM) அமைக்கப்படும் என்றும் கூறினார். பீகாரில் உள்ள ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் கூடுதல் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும் என்றும் நாடு முழுவதும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்
அடுத்ததாக பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கு, புதிதாக தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடனுதவி வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் 10,000 சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும் என்றும். காலணி மற்றும் தோல் துறையைப் பொருத்தவரையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறினார்.
50 ஆண்டு வட்டி இல்லாத கடன்கள் மூலம் மாநிலங்களின் உள்கட்டமைப்பு செலவினங்களுக்காக ரூ. 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். புதிய திட்டங்களில் ரூ. 10 லட்சம் கோடி மூலதனத்தை மீண்டும் பயன்படுத்த 2025 - 2030 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது சொத்து பணமாக்குதல் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
மறுகட்டமைப்புமேம்பாடு, நீர், சுகாதார நோக்கங்களுக்காக ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் நகர்ப்புற சவால் நிதியை அரசு அமைக்கும் என்றும் கூறினார்.
நகர்ப்புற தொழிலாளர்களின் வருமானத்தை மேம்படுத்த உதவும் வகையில், மேம்படுத்தப்பட்ட கடன்களுடன் பிரதமர் ஸ்வாநிதி புதுப்பிக்கப்படும் என்றும் கூறினார். கடந்த ஆண்டு ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, நகரங்களை வளர்ச்சி மையங்களாக மாற்றுவதற்கும், ஆக்கப்பூர்வமான மறுமேம்பாட்டை ஆதரிப்பதற்கும், நீர் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் ரூ. 1 லட்சம் கோடி நகர்ப்புற நிதி தரப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications