சுதந்திரப் போராட்டத்தில் பிறந்த இயக்கமே "ஆர்எஸ்எஸ்" - கார்கேவுக்கு வானதி சீனிவாசன் பதிலடி
டெல்லி: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பிறந்த இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக பாஜகவினரின் நாய் கூட சாகவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வானதி சீனிவாசன் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், கர்நாடகா மாநிலத்தின் முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் பாஜக மீது கார்கே இவ்வாறு அவதூறு பரப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஜகவை கொதிக்க வைக்கும் கார்கே
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன பொறுப்பேற்றது முதலாக பாஜக மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியை ராவணன் என கார்கே கூறியது பெரும் சர்ச்சையானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக ஒட்டுமொத்த பாஜகவினரையும் குறிப்பிட்டு மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.

"உங்கள் நாய் கூட சாகவில்லை"
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த வாரம் நடந்தது. இந்த யாத்திரையில் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார்.
அதன்பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், "இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக நூற்றுக்கணக்கான காங்கிரஸார் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவ்வளவு ஏன்.. சுதந்திரத்திற்கு
பிறகும் கூட முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தனர். ஆனால், பாஜகவினர் கூட வேண்டாம்.
பாஜகவினரின் ஒரு நாயாவது சுதந்திரப் போராட்டத்தில் இறந்திருக்கிறதா?
ஆனாலும், அவர்கள் தங்களை தாங்களே தேசபக்தர்கள் எனக் கூறிக்கொள்வார்கள்" என்று அவர் பேசினார்.

வானதி சீனிவாசன் பதிலடி
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குறித்து பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பாஜகவினர் வீட்டு நாய் கூட நாட்டுக்காக இறக்கவில்லை என
கார்கே கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒன்பது முறை எம்எல்ஏவாகவும், இரண்டு எம்.பி.யாக இருந்த, பட்டியலினத்தைச் சேர்ந்த அவரால் கர்நாடக முதல்வராக முடியவில்லை. அந்த விரக்தியில்தான் பாஜக மீது அவர்
இவ்வாறு அவதூறு பரப்புகிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் பிறந்த ஆர்எஸ்எஸ்
ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கோவார் காங்கிரஸில் இருந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். சிறையில் இருக்கும் போது அவர் சிந்தனையில் உதயமாகி, பின்னர் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ். ஆகவே, சுதந்திரப் போராட்டத்தில் தான் ஆர்எஸ்எஸ் இயக்கமே பிறந்தது. ஜனசங்கத்தை தொடங்கிய சியாம பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்தியாய ஆகியோர் நாட்டுக்காக உயிரையே கொடுத்தவர்கள். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இடதுசாரி தீவிரவாதத்திற்கு பல நூற்றுக்கணக்கான பாஜகவினர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு தனது அறிக்கையில் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications