சவுதி செல்பவர்களுக்கு குட் நியூஸ்..! கொரோனா வேக்சின் போட்டிருந்தால் தனிமைபடுத்துதல் தேவையில்லை
டெல்லி: சவுதி நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள், அங்கு கொரோனா வேக்சின் 2 டோஸ்களை போட்டிருந்தால், தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை எனச் சவுதி அரசு அறிவித்துள்ளது.
கொரோன பெருந்தொற்றை இன்னும் எந்தவொரு உலக நாடும் முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை. சில நாடுகள் மட்டும் கடுமையாகக் கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைத்துள்ளது.
இந்த வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருவதால் இதைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

கடும் கட்டுப்பாடுகள்
இதனால் இன்னும் பல நாடுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்புவோருக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றான சவுதியிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இந்தியா உட்பட 15 நாடுகளை ரெட் லிஸ்டில் பட்டியலிட்டுள்ள சவுதி அரசு, இந்த நாடுகளில் இருந்து சவுதி வரத் தடை விதித்திருந்தது.

தளர்வுகள் அறிவிப்பு
இதனால் சவுதியில் இருந்து இந்தியா வந்திருந்த பலரும் மீண்டும் அங்குச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்நிலையில், இந்தியர்களுக்குச் சற்று நிம்மதி தரும் வகையில் புதிதாக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சவுதியிலுள்ள இந்தியத் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "சவுதி அரேபியாவில் 2 டோஸ் வேக்சின் போட்டுக் கொண்ட பிறகு இந்தியா சென்றவர்கள். மீண்டும் சவுதி திரும்ப விரும்பினால், அவர்கள் 3ஆம் நாட்டில் தனிமைப்படுத்தும் காலத்தைச் செலவிடத் தேவையில்லை" எனக் கூறப்பட்டுள்ளது.

நிம்மதி
சவுதி அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் இது குறித்த கூடுதல் தகவல்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாகத் தாயகம் திரும்பிய பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மீண்டும் சவுதி திரும்ப முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் பலருக்கும் வேலை இழக்கும் சூழலும் ஏற்பட்டது. இந்தச் சூழலில் சவுதி அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது சற்று நிம்மதியை தரும் வகையில் உள்ளது.

சவுதி அரசு
முன்னதாக கடந்த மே மாதம் சவுதி அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதாவது தடை செய்யப்பட்ட இந்தியா உட்பட 15 நாடுகளைத் தவிர மற்ற நாடுகளுக்கு எவ்வித முன்னனுமதியும் பெறாமல் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அரசு உத்தரவை மீறி சிலர் தடை செய்யப்பட்ட நாடுகளுக்கு முறைகேடாகச் சென்று வந்தாக புகார்கள் எழுந்தன. இதனால் சவுதியில் மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்படி முறைகேடாகச் சென்று வந்தவர்களுக்கு 3 ஆண்டு பயண தடை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. டெல்டா கொரோனாவால் இந்தியாவில் கொரோனா மளமளவென உயர்ந்து. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சம் வரை சென்றது. இதனால் ஐக்கிய அமீரகம் மட்டுமின்றி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்தன. இந்தியாவில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்த பிறகு இந்தத் தடை படிப்படியாக நீக்கிக் கொள்ளப்பட்டன.












Click it and Unblock the Notifications