அரசியல் சாசனத்தில் மதச்சார்பின்மை வார்த்தையை நீக்க கோரும் சு.சுவாமி மீது வழக்கு- செப்.23-ல் விசாரணை
டெல்லி: நாட்டின் அரசியல் சாசனத்தில் மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகிய வார்த்தைகளை நீக்க கோரி பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது செப்டம்பர் 23-ல் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நமது நாட்டின் அரசியல் சாசனத்தின் முகவுரையில் Socialism and Secularism- மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வார்த்தைகளை நீக்க வேன்டும் என்பது வலதுசாரிகளின் நீண்டகால கோரிக்கை.
ஜார்க்கண்ட் ஆளுநர் திடீர் டெல்லி பயணம்- ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவிக்கு ஆப்பு?
மத்திய பாஜக அரசு
மத்தியில் வலதுசாரியான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த புதிதில், 2015-ம் ஆண்டு நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அரசியல் சாசனத்தின் முகவுரையுடன் கூடிய விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதில், Socialism and Secularism என்ற வார்த்தைகள் இடம்பெறாமல் இருந்தன. மத்திய அரசின் இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.
பாஜக, சிவசேனா ஆதரவு
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், Socialism and Secularism என்ற வார்த்தைகளை அரசியல் சாசனத்தில் இருந்து நீக்குவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றார். மத்திய பாஜக அரசின் இந்த கருத்துக்கு அப்போது கூட்டணியில் இருந்த சிவசேனா ஆதரவு தெரிவித்தது. ஆனால் இதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது.
சு.சுவாமி புதிய வழக்கு
இந்த நிலையில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, Socialism and Secularism ஆகிய வார்த்தைகளை அரசியல் சாசனத்தில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதிகள், இந்திரா பானர்ஜி மற்றும் எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது, இதேபோல் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன் சேர்த்து செப்டம்பர் 23-ந் தேதி விசாரணை நடைபெறும் என ஒத்திவைத்தனர். கடந்த 2020-ம் ஆண்டும் இதேபோல Socialism and Secularism ஆகிய வார்த்தைகளை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளது.
அரசியல் சாசனத்தவர் இந்திரா காந்தி
உச்சநீதிமன்ற வழக்கு தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய வார்த்தைகளை நீக்கக் கோரும் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த இரு வார்த்தைகளையும் அரசியல் சாசனத்தில் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை 1949-ம் ஆண்டு அம்பேத்கர் நிராகரித்தார். ஆனால் அவசரநிலை காலத்தில் இந்திரா காந்தி அம்மையார்தான் அரசியல் சாசனத்தில் இதனை சேர்த்தார். இந்த வழக்கில் நான் வெற்றி பெற்றால் அம்பேத்கர் மட்டும் அல்ல மறைந்த சரத் ஜோஷியும் மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.