வங்கி கடன் வட்டி சலுகை.. கடனை செலுத்தி அவகாசம் கோரி வழக்கு.. விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் வரை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்துவதில் சலுகை அளிக்க வேண்டும் மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் தாக்கல் செய்த பொதுநலன் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த மனுவில், கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக உள்ளது. எனவே இப்போதைய சூழலில் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் மக்கள் வாங்கியுள்ள கடனுக்கு வட்டித் தள்ளுபடி வழங்கிட வேண்டும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 6 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் அல்லது கொரோனா பரவல் முடியும் வரை சலுகை அளிக்கவேண்டும்.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளதால் இந்த காலக்கட்டத்தில் கடனையும் , வட்டியையும் செலுத்த முடியாத மக்கள் மீது எந்த வங்கியும், நிதி நிறுவனம் அவர்களின் சொத்துக்களை ஏலம் விடாமல் தடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அழுத்தம் வேண்டாம்
கடனை திருப்பிச் செலுத்த முடியாத, வட்டி செலுத்த முடியாத மக்களின் வங்கிக்கணக்கை இந்தக் காலகட்டத்தில் வாராக் கடன் பட்டியலிலும் சேர்க்கக்கூடாது. இந்த நோய் தொற்று சூழலில் மக்களுக்கு கூடுதல் அழுத்தமும் தராமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதிசுமை குறைய வேண்டும்
இப்போது உள்ள சூழலில் மக்களுக்கு நிதிச்சுமை குறைய வேண்டும், மக்கள் தங்களின் சுயமரியாதையை இழந்துவிடக்கூடாது. நிதிக்கொள்கைகள் அரசால்தான் வகுக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் வாழ்வதே கேள்விக்குறியாக உள்ளது. ஆதலால் நம்நாட்டு மக்கள் மரியாதையுடனும், எந்தவிதமான மனஅழுத்தமும் இன்றி வாழ வழிவகை செய்ய வேண்டும்.

பொருளாதார இழப்பு
ஊரடங்கு நடவடிக்கைகளை பல்வேறு மாநிலங்கள் எடுத்து வருகின்றன. இதனால் மக்களுக்கு இயல்பாகவே பொருளாதார நெருக்கடி , மன அழுத்தம், மருத்துவ அவசரநிலை போன்றவை ஏற்பட்டுள்ளது, இதனால் மிகுந்த குழப்பத்தில் மக்கள் தவிக்கிறார்கள். ஏராளமான பொருளாதார இழப்புகளையும், குடும்பத்தினர் இழப்புகளையும் சந்தித்தும் உள்ளார்கள்.

கொரோனா பேரழிவு
கொரோனா 2-வது அலை ஒட்டுமொத்த தேசத்தையும் மீண்டும் லாக்டவுனுக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. பேரழிவை கொரோனா ஏற்படுத்தி உள்ளது என்றால் அதனல் போடப்பட்ட லாக்டவுன் நடவடிக்கை பொருளாதாரத்துக்கும் அழிவை ஏற்படுத்தி உள்ளது" என்று கூறியுள்ளார். இந்த மனுவை வரும் 24ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிபதிகள் அமர்வு விசாரிக்க முடிவு செய்திருக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்ஆர். ஷா, அசோக் பூஷாந் ஆகியோர் அமர்வு விசாரிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications