ஓமிக்ரான் உருமாறிய கொரோனா.. வரும் நாட்களில் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.. அலர்ட் செய்த மத்திய அரசு
டெல்லி: ஒமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில அரசுகளும் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா இதுவரை 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பும் இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனவை கவலைக்குரிய கொரோனாவாக பட்டியலிட்டுள்ளது.
இதையடுத்து பல்வேறு உலக நாடுகளும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இந்தியாவிலும் ஓமிக்ரான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேவாலயம்: துணைபோன தாசில்தார் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு
கொரோனா சோதனைகள்
இந்தச் சூழலில் ஓமிக்ரான் கொரோனாவை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஓமிக்ரான் வைரஸ் பரவலை எளிதாகக் கண்டறிந்து நிலைமை சமாளிக்க கொரோனா பரிசோதனைகளைத் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார். புதிய ஓமிக்ரான் கொரோனாவை RT PCR மற்றும் RAT சோதனைகளில் கண்டறியலாம் என்பதால் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மாநில அரசுகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மரபணு வரிசைப்படுத்தல் சோதனை
மேலும், மத்திய அரசு சார்பில் மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆபத்தான நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளின் மாதிரிகள் கவனமாகப் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா உறுதியானால், அவர்களின் மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்கு உடனடியாக INSACOG ஆய்வகங்களுக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பு தீவிரம்
RT-PCR சோதனைகளை அதிகரிக்கவும் சோதனை வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக அமல்படுத்தவும் மத்தி அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் போதுமான சோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஒரே பகுதியில் அதிகப்படியான நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அந்த பகுதியைத் தீவிரமாகக் கண்காணிக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இருமுறை சோதனை
ஆபத்தான நாடுகளில் இருந்து வந்த பயணிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று சோதனை செய்ய வேண்டும். முதல் ஒரு வாரத் தனிமைக்குப் பிறகு 8ஆம் நாளில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அதில் நெகட்டிவ் என முடிவு வந்தாலும்கூட அடுத்த ஒரு வாரத்திற்கு அவர்கள் தனிமையில் இருக்க வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
மருத்துவ உட்கட்டமைப்பு
மாநிலத்தில் தேவையான ஐசியு படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் போன்ற சுகாதார உள்கட்டமைப்பு இருப்பதை உறுதி செய்ய மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, விமான நிலைய அதிகாரிகளுடன் நினைந்து "ஏர் சுவிதா" தளத்தின் உதவியுடன் அனைத்து வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் கொரோனா உறுதி செய்யப்படும் பயணிகளின் தரவுகளைச் சேர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
வெளிநாட்டினருக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில், இது தொடர்பாக நாளைய தினம் (நவம்பர் 30) குடிவரவு, விமான நிலைய சுகாதார அதிகாரிகள், பொதுச் சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு தினசரி கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.