காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா உறுதி.. விரைவில் குணம்பெற கட்சியினர் வேண்டுதல்!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். கடந்த 3 மாதங்களில் 2-வது முறையாக அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி அனைவரையும் பதற்றத்துக்குள்ளாக்கியது.
தற்போது நடப்பு ஆண்டு தொடக்கத்தில் அதன் பரவல் விகிதம் குறைந்தாலும், மீண்டும் இந்தியா போன்ற நாடுகளில் லேசாக வேகமெடுக்க தொடங்கியுள்ளது என்றே கூறலாம்.

சோனியா காந்திக்கு கொரோனா
ஏழைகள் முதல் பணக்காரர்கள், செல்வந்தர்கள், அரசியல் வாதிகள் என வேறுபாடு இன்றி கொரோனா பரவி வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கோவிட்-19 பாசிட்டிவ் என்று அறிந்ததும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். ஏற்கனவே கடந்த ஜுன் மாதம் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் 2-வது முறையாக அவர் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.

கடந்த ஜூன் மாதம் தான்..
ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டதும் அவர் உடனடியாக தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார். பின்னர் டெல்லி கங்காராம் ஆஸ்பத்திரியில் சோனியா காந்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து ஜூன் 20ம் தேதி சோனியா காந்தி பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும் அவரை வீட்டில் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

2-வது முறையாக பாதிப்பு
தொடர்ந்து அவருக்கு உடல் நலம் சீராகியதால் கட்சி பணிகள் மற்றும் நாடாளுமன்ற கூட்டங்களில் கூட கலந்துகொண்டார். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கடந்த 3 மாதங்களில் சோனியா காந்திக்கு 2-வது முறையாக சோனியா காந்திக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சோனியா காந்திக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உடல்நிலை சீராக உள்ளது
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், ''காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவரது உடல் நிலை சீராக உள்ளது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சோனியா காந்தி தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்" என அந்த பதிவில் கூறியிருந்தார். இந்த வார துவக்கத்தில் சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சோனியா காந்திக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

விரைவில் நலம் பெறுவார்
முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை தனது இல்லத்தில் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சோனியா காந்தி விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''சோனியா காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் உடல் நலம் தேற வேண்டும். சோனியா காந்தி நல்ல உடல் நலத்துடன் இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications