என்னாது.. மின்சாரத் திருட்டுக்கு 18 ஆண்டுகள் சிறையா? குற்றவாளியை விடுவித்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: மின்சாரத்தை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதுதொடர்பான தங்கள் உத்தரவில், "நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்காவிட்டால் ஒரு குடிமகனின் சுதந்திரமும், உரிமையும் பறிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கூட, இந்த வழக்கில் நீதி தவறப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்காததுதான் வேதனை அளிக்கிறது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
துர்கா ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கியது ஏன்..? திமுக எம்எல்ஏ பரந்தாமன் விளக்கம்
மின்சார திருட்டு
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இக்ராம் (42). சிறிய கடை ஒன்றை வைத்து நடத்தி வரும் இக்ராம், மின் கம்பத்தில் இருந்து மின்சாரத்தை திருடி தனது கடைக்கு இணைப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இவ்வாறு மின்சாரத் திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த விஷயம் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரியவந்ததை அடுத்து, இதுகுறித்து அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீஸார் கடந்த 2019-ம் ஆண்டு வரை கைது செய்தனர்.
18 ஆண்டுகள் சிறை
இதன் தொடர்ச்சியாக, அவர் மீது 9 வழக்குகளை தனித்தனியாக போலீஸார் பதிவு செய்தனர். இந்த வழக்கை கடந்த 2020-ம் ஆண்டு விசாரித்த கீழமை நீதிமன்றம், இக்ராமுக்கு ஒவ்வொரு வழக்குக்கும் 2 ஆண்டுகள் வீதம் மொத்தம் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும், இந்த தண்டனையை இக்ராம் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, இக்ராம் சிறையில் அடைக்கப்பட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
கீழமை நீதிமன்றம் தனக்கு விதித்த இந்த தண்டனையை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இக்ராம் மேல்முறையீடு செய்தார். அதில், சாதாரண மின்சாரத் திருட்டு வழக்குக்காக 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது நியாயம் அல்ல என்றும், எனவே தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். எனினும், அவரது கோரிக்கையை அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. மேலும், கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையையும் அது உறுதி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இக்ராம் மேல்முறையீடு செய்தார்.
விடுதலை செய்த உச்ச நீதிமன்றம்
இக்ராமின் இந்த மனுவானது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை ஆராய்ந்த நீதிபதிகள் கூறியதாவது: ஒரு மின்சாரத் திருட்டு வழக்கில் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மின்சாரத் திருட்டை ஒரு கொலை குற்றத்திற்கு இணையாக எப்படி பார்க்க முடியும்? இது நீதிக்கு பொருந்தாத தீர்ப்பு என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கூட, குற்றவாளி தவறாக தண்டிக்கப்பட்டிருப்பதை கவனித்திருக்க வேண்டும். ஆனால் உயர் நீதிமன்றம் கூட இதை கவனிக்காதது வருத்தம் அளிக்கிறது. எனவே, இந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை மனுதாரர் அனுபவித்ததே போதுமானதாக கருதி அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிடுகிறது. இதை நாங்கள் செய்யாவிட்டால் ஒரு குடிமகனின் உரிமையும், சுதந்திரமும் பறிபோய்விடும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.