Armstrong: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிபிஐ விசாரிக்க தடை இல்லை- உறுதி செய்த உச்சநீதிமன்றம்
டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அதில் சிபிஐ விசாரணைக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி அவருடைய வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து செம்பியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்தனர். அதில் ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ரவுடி நாகேந்திரன் உடல்நல பிரச்சினையால் நேற்று காலமானார். மேலும் இருவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதால் அவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புள்ளதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கை ரத்து செய்யக் கோரியும் தமிழக அரசு வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட ஹைகோர்ட்டின் உத்தரவு தொடரும் என்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை" என்றும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications