உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு எதிர்ப்பு வழக்கு- வாதம் நிறைவு-உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு
டெல்லி: உயர்ஜாதி ஏழைகள் அல்லது முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் அல்லது முற்படுத்தப்பட்ட வகுப்பில் ஏழைகள் எனப்படுவோருக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்புகளில் மத்திய பாஜக அரசு வழங்கி இருக்கும் 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
சமூகம், பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுதான் சமூக நீதி என்பதால் இந்திய அரசியல் சாசனமும் இதனை உறுதி செய்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுக்காகதான் இந்திய அரசியல் சாசனம் முதன் முதலாக திருத்தப்பட்டது. இந்தத் திருத்தத்துக்காக போராடியது தந்தை பெரியார்தான்.
இடஒதுக்கீட்டை உயர்ஜாதியினர் எனப்படும் முற்பட்ட வகுப்பினர் கடுமையாக எதிர்த்து வந்தனர். மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியது மண்டல் கமிஷன். இதனை எதிர்த்து உயர்ஜாதி எனப்படுகிற முற்பட்ட வகுப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி தீக்குளித்த கொடுமையும் இந்தியாவில்தான் அரங்கேறியது. இடஒதுக்கீடுக்கு எதிராக எத்தனையோ சட்டப் போராட்டங்களை வழக்குகளை நடத்தி வருவதும் முன்னேறிய அல்லது உயர்ஜாதியினர்தான்.

10% இடஒதுக்கீடு
ஆனால் காலம் மாற உயர்ஜாதி எனப்படும் முற்படுத்தப்பட்டோரும் இடஒதுக்கீடு கோரினர். இதனடிப்படையில்தான் உயர்ஜாதி எனப்படும் முற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியான பின்தங்கிய ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டது. இதற்காக அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. முற்படுத்தப்பட்டோரில் ஆண்டு வருமானம் ரூ8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளோருக்கு இந்த இடஒதுக்கீடு பொருந்துமாம்.

தீர்ப்புக்கு எதிரானது
பொதுவாக இடஒதுக்கீடு வழக்குகளில் இடஒதுக்கீடு அளவானது 50%-த்தை தாண்டக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. மத்திய அரசு உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் இந்த 50% இடஒதுக்கீடு வரம்பு மீறப்பட்டிருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
நாட்டின் அரசியல் சாசனத்தில் சமூக- கல்வி அடிப்படையில்தான் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது; ஆனால் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தவில்லை என இந்த வழக்குகளில் சுட்டிக்காட்டபபட்டிருந்தது. திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் உள்ளிட்டோரும் இவ்வழக்கை தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து விசாரித்தது. இவ்வழக்கில் திமுக சார்பாக வில்சன் எம்.பி உள்ளிட்டோர் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

விசாரணை நிறைவு- தீர்ப்பு ஒத்திவைப்பு
உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் அரசியல் சாசன பெஞ்ச் முன்னிலையிலான வழக்கு விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இன்றும் 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கு விசாரணை நேரடியாகவும் ஒளிபரப்பானது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications