சீன பிரச்சனைய பேசுங்க, எல்லாத்துக்கும் நேரு காரணம்னு சொல்லாதீங்க -பிரதமர் மோடியை சாடிய மன்மோகன் சிங்
டெல்லி: சீனா நமது எல்லைக்குள் வந்து அமர்ந்திருக்கிறது. அதை தட்டிக் கேட்காமல், மக்களிடமிருந்து மறைக்கவே மோடி அரசு முயற்சித்து வருகிறது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாஜகவை சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உ.பி: 3-ம் கட்ட தேர்தலில் பாஜகவுக்கு ஆகப் பெரும் சவாலாக இருக்கும் ஹத்ராஸ் பலாத்கார சம்பவம்!
எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில், மன்மோகன் இதுகுறித்து தற்போது பேசியிருப்பது முக்கியமாக கருதப்படுகிறது.
மன்மோகன் சிங்
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. இந்நிலையில், நடைபெறவுள்ள பஞ்சாப் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், ''பொருளாதாரக் கொள்கை குறித்த சரியான புரிந்துணர்வு மோடி அரசிடம் இல்லை. வெளியுறவுக் கொள்கையிலும் பாஜக அரசு தோற்றுப் போய் விட்டது. சீனா நமது எல்லைக்குள் வந்து அமர்ந்திருக்கிறது. அதை தட்டிக் கேட்காமல், மக்களிடமிருந்து மறைக்கவே இந்த அரசு முயற்சித்து வருகிறது'' என குற்றம் சாட்டியுள்ளார்.
வெளியுறவு கொள்கை
''தலைவர்களை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிப்பதாலோ, ஊஞ்சலில் ஆடுவதாலோ, பிரியாணி ஊட்டுவதன் மூலமோ வெளியுறவுக் கொள்கையை கட்டமைக்க முடியாது என்பதை பிரதமர் புரிந்துகொண்டிருப்பார் என நம்புகிறேன்'' என பிரதமர் மோடியை வெளியுறவுக் கொள்கை விஷயத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.
சீனா
லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன வீரர்கள் இடையே கடந்த 2020-ம் ஆண்டு மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். சீன ராணுவத்தின் தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.
பேச்சுவார்த்தை
கிழக்கு லடாக்கில் 2020 முதல் வடக்கேயும் தெற்கேயும் இந்தியா மற்றும் சீனாவிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட ராணுவத்தினரை நிறுத்திவைத்துள்ளனர். இந்த பதற்றத்தைத் தவிர்க்க இருநாட்டு ராணுவமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. 13 முறை நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், 14வது பேச்சு வார்த்தை நடந்தது.
மறுப்பு
இந்நிலையில், சீனா கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரியில் பாலம் கட்டுவதாக தகவல்கள் வெளியாகின. அதற்கான ஆதாரமாக செயற்கைகோள் படமும் வெளியானது. ஆனால் அங்கு சீனா பாலம் கட்டவில்லை என பாஜக மறுப்பு தெரிவித்தது. செயற்கைகோள் படம் வெளியானபோதும், பாஜக அதை மறுத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
சிறுவன் கடத்தல்
அதேபோல், கடந்த மாதம் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சீன எல்லையில் உள்ள கிராமத்தில் இருந்து சிறுவன் மிரன் தரனை சீன ராணுவம் கடத்தியது. சிறுவனை மீட்டுக்கொடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகியே பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஒரு வாரத்துக்குப் பிறகு சிறுவனை சீன ராணுவம் ஒப்படைத்தது.
இந்நிலையில் தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சீனா தொடர்ந்து இந்தியாவிடம் அத்துமீறி வருவது குறித்து குறிப்பிட்டுள்ளார்.
நேரு காரணமா?
மன்மோகன் சிங் மேலும் கூறுகையில், ''ஒருபுறம் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகளை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்க, மறுபுறம் கடந்த ஏழரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசு, தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு, சரி செய்யாமல், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை இன்னும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.பிரதமரின் பதவிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளதாக நான் உணர்கிறேன். தவறுகளை குறைத்து மதிப்பிடுவதற்காக வரலாற்றை குறை கூறுவதை விட பிரதமர் கண்ணியத்தை காக்க வேண்டும்'' என்றும் தெரிவித்துள்ளார்.