செல்லாத பணம் நாவல் எழுதிய தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. செல்லாத பணம் நாவலை எழுதிய எழுத்தாளர் இமையம் சாகித்ய அகாடமி விருது பெறுகிறார்.
டெல்லி: செல்லாத பணம் என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் இமையத்திற்கு 2020ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருது பெறுபவர்களுக்கு தாமிரபட்டயமும் ரூ.1,00,000 ரொக்கமும் வழங்கப்படும்.
Recommended Video
ஒவ்வொரு ஆண்டு மத்திய அரசின் சார்பில் எழுத்தாளர்களுக்கான உயர்ந்த விருதுகளாக சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படும். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ராஜஸ்தானி, உருது, சிந்தி, 24 மொழிகளில் சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து அதை எழுதிய எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள். தாமிரபட்டயம் விருதுடன் ரூ.1,00,000 பணமும் வழங்கப்படும்.
2020 ஆம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த நாவலாக ' செல்லாத பணம்' என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது அதை எழுதிய எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் இயல் விருதை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் எழுத்தாளர் இமையம் பெற்றுள்ளார்.
எழுத்தாளர் இமையம், தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வெ. அண்ணாமலை என்ற இயற்பெயர் கொண்ட இவர், எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
இவரது முதல் நாவலான 'கோவேறுக் கழுதைகள்' 'Beasts of Burden' என ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. சாதி ஆணவக்கொலையைப் பற்றிய பெத்தவன் என்கிற நெடுங்கதை, இவரின் படைப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று. இக்கதை தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு, திருப்பதி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
'கோவேறு கழுதைகள்', 'ஆறுமுகம்', 'செடல்', 'எங்கதெ', 'செல்லாத பணம்' ஆகியவை இவருடைய நாவல்கள். இவை தவிர, நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
'அக்னி விருது', 'பெரியார் விருது', 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது', 'திருப்பூர் தமிழ்ச்சங்க விருது' உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 'செல்லாத பணம்' என்ற நாவலை எழுதியதற்காக இப்போது இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது பெறுகிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு தமிழில் சிறந்த நாவலாக 'சூல்' என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டது. அதை எழுதிய எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சாகித்ய அகடாமி விருது பெற்ற இமையத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார், அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தனது எழுத்துகளால் எளிய மக்களின் வாழ்வியலை அழகியலோடு வெளிப்படுத்தும் திராவிட இயக்கப் படைப்பாளர் திரு. இமையம் அவர்களின் 'செல்லாத பணம்' புதினத்திற்கு #sahityaakademiaward கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி! கொள்கை சார்ந்த பயணத்துடனான படைப்புகள் மென்மேலும் விருதுகள் பெற்றிட வாழ்த்துகள்!" என்று கூறியுள்ளார்.