Budget 2019: ரூ. 5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்குதான் வருமான வரி விலக்கு.. மாறாத உச்சவரம்பு
Recommended Video
டெல்லி: தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்தத் தேவையில்லை.
தற்போது தனி நபருக்கான வருமான வரிக்கான விலக்கு ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சராக பொறுப்பு வகித்த பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.
அப்போது கோயல் கூறுகையில் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ. 2.50 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் 3 கோடி பேருக்கு பலனடைவர்.
வருமான வரி சலுகை
ஒட்டுமொத்த வருமான வரி சலுகை மூலம் ரூ. 6.25 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை. தனி நபரின் ஆண்டு வருமானத்தில் நிரந்தரக் கழிவுக்கான உச்சவரம்பு ரூ. 40 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது என தெரிவித்திருந்தார்.
நிதி அமைச்சர்
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசே மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார்.
நிர்மலா சீதாராமன்
பதவியேற்ற நாள் முதல் கடந்த ஒரு மாதமாக 2019-2020 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தயார் செய்து வந்தார். இந்நிலையில் ஒருங்கிணைந்த மத்திய பட்ஜெட்டை இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
மத்திய அரசின் வரி சலுகைகள்
இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை போல் வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசுகையில் நேரடி வரி விதிப்பு 78 சதவீதம் அதிகரித்துள்ளது. தனி நபர் ஆண்டு வருமானத்திற்கான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கு கீழே வருவாய் கொண்டவர்களுக்கு வரி இல்லை. 5 லட்சத்திற்கு மேலான ஆண்டு வருவாய் உள்ளவர்கள் மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டும்.
நடைமுறை
ஆண்டு வருமானம் ரூ 2 கோடி முதல் ரூ 5 கோடி வரை உள்ளவர்களுக்கு 3 சதவீதமும், ஆண்டு வருமானம் 5 கோடிக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 சதவீதமும் கூடுதல் வரி செலுத்த வேண்டும் என நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார். இந்த நிலையில் 5 லட்சத்து ஒரு ரூபாயிலிருந்து 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 12, 500 ரூபாயுடன் மொத்த வருமானத்தில் 20 சதவீதத்தையும் சேர்த்து வரியாக செலுத்த வேண்டும். அது போல் 10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 1,12,500 ரூபாயுடன் சேர்த்து மொத்த வருமானத்தில் 30 சதவீதத்தையும் சேர்த்து வரியாக செலுத்த வேண்டும். 5 லட்சம் வரை வருமான வரி விலக்கை தவிர்த்து ஸ்லாப்பில் எந்த மாற்றமும் இல்லை.