பிரதமர் மோடி, அமித்ஷா எங்கே? லோக்சபாவில் நடந்த சம்பவம்.. பதற்றத்தில் டெல்லி
டெல்லி: லோக்சபாவில் இரண்டு நபர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தார்களா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் என்பதால், இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் வழக்கம்போல கூட்டம் தொடங்கியது.

மதியம் பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென எம்பிக்களின் இருக்கையின் மீது இளைஞர் ஒருவர் குதித்திருக்கிறார். பார்வையாளர்கள் மாடத்திலிருந்து யாரோ தவறி விழுந்துவிட்டார்கள் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு சில விநாடிகளில் இளம் பெண் ஒருவரும் இதேபோல எம்பிக்களின் சீட் மீது குதித்திருக்கிறார். அப்போதுதான் எம்பிக்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே உடனடியாக அவர்கள் கூச்சலிட தொடங்கியுள்ளனர்.
கீழே குதித்தவர்கள் தங்கள் ஷுக்களிலிருந்து மர்ம பொருள் ஒன்றைய வெளியில் எடுத்திருக்கிறார்கள். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியேறியுள்ளது. இது லைட்டான மூச்சு திணறலை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர்களை பிடிக்க நாடாளுமன்ற காவல்துறையினர் முயன்றனர். ஆனால் அவையில் இருந்த எம்பிக்கள் இருவரையும் மடக்கியுள்ளனர். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு அவையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கூறுகையில், "அவையில் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. திடீரென பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருவர் குதித்தனர். ஒருவர் உறுப்பினர்கள் இருக்கையின் மீது குதித்தார். இன்னொருவர் சபாநாயகர் நோக்கி ஓடினார். இருவர் கைகளிலும் வண்ணப் புகை உமிழும் பொருள் இருந்தது. அது விஷப் புகையாக இருக்கலாம், கண்ணீர் புகையாக இருக்கலாம், ஏன் புகை வெடிகுண்டாகவும் இருக்கலாம். நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய பாதுகாப்பு மீறல் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு உள்ளே நடந்த சம்பவத்தை போலவே நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இதேபோல இரண்டு பேர் வண்ண நிற புகை வெளியுறும் பொருளை வைத்து ஆக்ரோஷமாக கோஷமிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து நால்வரிடமும் டெல்லி போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் இவர்கள் மணிப்பூருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
அதேபோல இந்த சம்பவம் நடக்கும்போது அவைக்குள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இல்லை என்றும் தெரிய வந்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அமித்ஷா ராய்ப்பூர் சென்றிருந்ததால் இன்று லோக்சபாவில் அவர் இல்லை. ஆனால் ராகுல் காந்தி இந்த சம்பவத்தின் போது அவைக்குள்தான் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications