நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.. லோக்சபாவில் டிஆர் பாலு ஆவேசம்
தமிழக அரசின் தீர்மானம், மசோதா மீது ஆளுநரோ, மத்திய அரசோ எந்த முடிவும் எடுப்பதில்லை என திமுக எம்.பி டிஆர் பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லி: தமிழகத்தில் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்த முடியாத அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடு உள்ளது என டி.ஆர். பாலு கூறியுள்ளார். தமிழக அரசின் தீர்மானம், மசோதா மீது ஆளுநரோ, மத்திய அரசோ எந்த முடிவும் எடுப்பதில்லை எனவும், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது இப்போது வரை தெரியவில்லை எனவும் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்றும் டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை மாலை நீட் விலக்கு மசோதா தொடர்பாக லோக்சபாவில் விவாதிக்கக் கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது. ஒத்திவைப்பு தீர்மானம் தொடர்பாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் வழங்கினார். நீட் விலக்கு தொடர்பாக ஏற்கனவே கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று லோக்சபாவில் பேசிய , திமுக எம்பி டி.ஆர்.பாலு, ஆளுநருக்கு தமது அரசியல் சாசனம் அதிக அதிகாரங்களை வழங்கி உள்ளது. நாட்டில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்க வேண்டும் . மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் முக்கிய பணி என்று கூறினார்.
தமிழக அரசு அனுப்பிய 7 மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார். தமிழக ஆளுநர் சட்டத்தை மதிக்காமல் காட்டாட்சி நடத்துகிறாரா? ஆளுநர் சட்டப்படி செயல்பட வேண்டும். சட்டசபையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார். தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் அல்லது நீங்க வேண்டும் என்றும் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்றார். மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு மட்டுமே உள்ளது. அந்த அதிகாரத்தை இவர் எடுத்துக்கொண்டு திருப்பி அனுப்பியுள்ளார் இது மோசமான நடவடிக்கை என்றார். இது அரசியல் சாசனப்படி சட்ட விரோதம் என்றும் கூறினார். ஆளுநர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும் என்றும் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்த முடியாத அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடு உள்ளது என டி.ஆர். பாலு கூறியுள்ளார். தமிழக அரசின் தீர்மானம், மசோதா மீது ஆளுநரோ, மத்திய அரசோ எந்த முடிவும் எடுப்பதில்லை எனவும், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது இப்போது வரை தெரியவில்லை எனவும் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications