எல்லோரும் பெட்ரோலை ஃபுல் பண்ணிக்கங்க.. மோடி அரசு ஆஃபர் முடிய போகுது.. ராகுல் காந்தி அவசர அட்வைஸ்!
டெல்லி : உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நிறைவடைய உள்ள நிலையில், மோடி அரசின் தேர்தல் ஆஃபர் முடிவுக்கு வர உள்ளது, பெட்ரோல் டேங்க்குகளை முழுவதுமாக நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உத்திரப் பிரதேசம், மணிப்பூர் , கோவா, பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் கடைசி மற்றும் 7வது கட்ட வாக்குப் பதிவு ஏழாம் தேதி நடைபெற உள்ளது.

5 மாநில தேர்தல்
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில் மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 7ஆம் தேதி உத்திர பிரதேசத்தில் இறுதிக் கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகு மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கடந்த பல நாட்களாக நாட்டில் பெட்ரோல் டீசல் விலை எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து ஒரே விலையில் நீடித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.40 ரூபாயாகவும் ஒரு லிட்டர் டீசலின் விலை 91.43 ரூபாயாகவும் உள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 111 டாலரை தொட்டு நிலையில் இந்தியாவில் தேர்தல் காரணமாகவே பெட்ரோல் டீசல் விலைகள் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் தேர்தல் முடிந்த பிறகு எரிபொருட்களின் விலை மிகக் கடுமையாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

விலை உயர்வு?
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை உயரும் அபாயம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பெட்ரோல் டீசல் விலை உயர இருப்பதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி.

ராகுல்காந்தி ட்விட்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மக்களை உடனடியாக பெட்ரோல் டேங்கை முழுவதுமாக நிரப்புங்கள் பிரதமர் மோடி அரசின் தேர்தல் முடிவுக்கு வரப்போகிறது என தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications