CUET UG 2022: இரவு முழுக்க காத்திருந்த மாணவர்கள்.. ஒரு வழியாக வெளியானது க்யூட் தேர்வு முடிவுகள்
டெல்லி: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET UG 2022) சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள 259 நகரங்களில் 489 மையங்களில் நடைபெற்றது. இதில் சுமார் 14.9 மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் இந்த தேர்வுக்கு மாநில அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு இரண்டு தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
9 நாள்.. பெங்களூர் பள்ளி விடுதியில் இருந்து மாயமான 3 மாணவிகள்.. வேளாங்கண்ணியில் தேடும் பணி தீவிரம்
க்யூட் தேர்வு
நாடு முழுவதும் 12ம் வகுப்புக்கு என பொதுத் தேர்வு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த தேர்வுதான் அடுத்த படிக்க இருக்கும் உயர்கல்வியை தீர்மானிக்கும் நிலையில் இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு புதிய தேர்வு ஒன்றை அறிவித்தது. அதாவது இனி கல்லூரிகளில் இளங்கலை படிக்க விரும்பும் மாணவர்கள் க்யூட் (Common Universities Entrance Test Undergraduate) எனப்படும் தேர்வில் வெற்றியடைய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்தது.
யுஜிசி அறிவிப்பு
யுஜிசியின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. ஏற்கெனவே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் பதட்டத்திலிருந்து படித்து வெளியே வருகிறார்கள். இந்நிலையில் இளங்கலை சேர்வதற்கு இந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் க்யூட் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனும் அறிவிப்பு எந்த விதத்தில் நியாயம் என்றும், இவ்வாறு இருக்கையில் எதற்காக 12ம் வகுப்பில் பொதுத் தேர்வு என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
தேர்வுகள்
இந்த எதிர்ப்புக்கு மத்தியிலும் 44 மத்திய பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், 19 தனியார் பல்கலைக்கழகங்கள் இந்த தேர்வை நடத்தின. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தியது. கணினி வழியாக தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் கடந்த ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் 30ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 259 நகரங்களில் 489 மையங்களில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.
எதிர்ப்பு
இதில் சுமார் 14.9 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த தேர்வுக்கு அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் பீகார் மாநிலத்திலிருந்து மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த தேர்வு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவுகளை காண
மேலும் கடந்த ஏப்ரல் 11ம் தேதி இந்த தேர்வை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'மாநிலத்தின் கல்வி உரிமை மீது மத்திய அரசின் தாக்குதல் தொடர்கிறது' என்று கூறியிருந்தார். ஆயினும் தேர்வுகள் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளை cuet.samarth.ac.in. எனும் இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.