நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்குகிறது - புயல் வீசும்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 அமர்வுகளைக் கொண்ட கூட்டத்தொடர் அனைத்து கோவிட் -19 நெறிமுறைகளையும் பின்பற்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறாத நிலையில், தற்போது 20 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒரே நேரத்தில் அமர்வுகள் இருந்தாலும் உறுப்பினர்கள் சமூக விலகல் விதிமுறைகளைப் பின்பற்றி அமருவார்கள்.
குளிர்கால கூட்டத்தொடரில், வளாகம் மற்றும் முக்கிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைபவர்கள் எப்போதும் முககவசம் அணிய வேண்டும் மற்றும் கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.
ஜூலை 19 முதல் குளிர்கால கூட்டத்தொடர்.. வேக்சின் போட்ட 90% எம்பிகள்.. தடுப்பூசி போடாத ராகுல்.. ஏன்?
2024 பொதுத் தேர்தலுக்கான அரையிறுதியாகக் கருதப்படும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரபிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அதேசமயம் முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பு, காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்ததில் வெடித்த வன்முறை, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்கள், இந்தக் கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என்பதால் புயல் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.